Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 1

 



வார்னிங்; கதை ப்யூர் anti hero ஸ்டோரி. உடல், மன துன்புறுத்தல் (abuses, harassment, torcher, mental pressure) கதையில் இருக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் கதையை தொடரவும்.. என்னை நம்பி படிப்பவங்க கதையின் முடிவு வரை கூடவே வரும்படி அன்போடு கேட்டுக்கறேன். நீங்க பாதியில் டைவர்ட் ஆகி போனா நான் பொறுப்பு கிடையாது..) நன்றிகள் கதை 18+ கிடையாது. ஆனாலும் இக்கதைக்காக  சில விசயங்கள் எழுத படலாம். விரசமா இருக்காது. அப்படி இருந்தா சொல்லுங்க. நான் சரி பண்ணிக்கிறேன்...💞

வீட்டில் குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.

பட்டுச்சேலை கட்டி பதுமையாக நின்றிருந்தாள் சங்கவி. அவளுக்கு முன்னால் இருந்த சோபாவில் அமர்ந்திருந்த ஆதிரன் இவளின் முகத்தை கூட பார்க்கவில்லை. 

தன்னை பெண் பார்க்க வந்திருந்த ஆதீரனை அருவெறுப்போடு வெறித்தாள் சங்கவி. 

'இவனை போல அரக்கனோடு என்னை ஜோடி சேர வைக்க பார்க்கிறியே ஆண்டவா. உனக்கு கொஞ்சமும் மனசாட்சி இல்லையா?' என்று கடவுளை திட்டினாள். 

தங்க சிலை போலிருந்தாள் சங்கவி. ஆனால் உள்ளமும் கூட சிலையுடையதை போலதான் இருந்தது. கோபம், வெறுப்பு கடந்த ஒரு சுய பச்சாதாபத்தில் இருந்தாள். இயலாமை அவளை கட்டிப் போட்டு வைத்திருந்தது. 

"பொண்ணு பிடிச்சிருக்கா?" கடந்த காலத்தை பற்றி எதுவும் தெரியாத 

சங்கவியின் பெரியம்மா கேட்டாள். உடல் நல கோளாறால் மருத்துவமனை செல்வதற்காக இன்று காலையில் இந்த வீட்டிற்கு வந்திருந்தாள் அவள்.

ஆதிரன் அமைதியாய் அமர்ந்திருந்தான்.

மாப்பிள்ளையின் அம்மா காந்திமதியிடம் கேட்டாள் அதே பெரியம்மா.

"இதுல பிடிக்க என்ன இருக்கு? என்னை கேட்டா இந்த கல்யாண ஏற்பாடு நடக்குது?" என்ற காந்திமதி எழுந்து நின்றாள்.

"அம்மா." அழைத்த ஆதீரனை முறைத்தவள் "எனக்கு இவளை பிடிக்கல. அதையும் மீறி நீ கல்யாணம் பண்ணி வந்தா நான் ஒன்னும் தடையா நிற்க போறது கிடையாது." என்றவள் வீட்டை விட்டு வெளியே நடந்து வாசலில் சென்று நின்றுக் கொண்டாள்.

சங்கவியின் அம்மாவும் அப்பாவும் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் இருந்தனர். முள் மேல் இருப்பது போலிருந்தது.

"உங்க அம்மாவுக்கு பிடிக்கலையா?" அதிர்ச்சியோடு கேட்ட பெரியம்மாவிடம் "எனக்கும் கூடதான் பிடிக்கல‌." என்றான் அவன்.

பெரியம்மா அதிர்ச்சியில் வாயை பொத்தினாள். தன் சகோதரியை பார்த்தாள். தலை குனிந்து அமர்ந்திருந்த சங்கவியின் அம்மா ருக்மணி "நீ அமைதியா இரு அக்கா‌." என்றாள்.

"என்னடி அமைதியா இரு? இவனை விட்டா நம்ம பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை கிடைக்காதுன்னு நினைச்சியா? ஆயிரம் மாப்பிள்ளையை நான் வரிசையில் கொண்டு வந்து நிறுத்துறேன்." என்ற பெரியம்மாவிடம் "ஓ. நல்லது. அப்படியே ஐம்பது லட்சம் பணத்தை தந்துட்டு, இந்த வீட்டையும் என் பேருக்கு மாத்தி எழுதி தந்துட்டு வேற மாப்பிள்ளை பாருங்க.." என்றான் ஆதீரன்.

பெரியம்மாவுக்கு மீண்டும் அதிர்ச்சி. 

"இவங்க என்கிட்ட எவ்வளவு கடன் வாங்கி இருக்காங்க தெரியுமா? அந்த கடனை கட்ட முடியாமதான் பொண்ணை எனக்கு விக்கிறாங்க." ஆதீரனின் நக்கலில் 

சங்கவிக்கு மொத்த உடம்பும் பற்றி எரிந்தது.

பெற்றோரை பார்த்தாள். இருவரும் கலங்கும் கண்களோடு இருந்தனர். அம்மாவின் விழிகளில் இருந்து சொட்டிய கண்ணீர் கண்டு இவளுக்கு இதயம் ரணமானது.

"ப். ப்ளீஸ். போதும். உங்களை கல்யாணம் செஞ்சிக்க எனக்கு சம்மதம். இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க." இரு கைகளையும் கூப்பி சொன்னாள்.

வன்மத்தோடு அவளை பார்த்தவன் அவளின் கையை பற்றி இழுத்துக் கொண்டு அருகே இருந்த அறைக்கு சென்றான்.

அது குந்தவியின் அறை. அவளால்தான் இவ்வளவு பிரச்சனை. 

அறை சுவரில் இருந்த குந்தவியின் புகைப்படம் கண்டு ஆதீரனுக்கு இன்னும் அதிகமாக கோபம் வந்தது.

சங்கவியின் தாடையை பிடித்து நிமிர்த்தினான். அருவெறுப்பில் வாந்தி வருவது போலிருந்தது அவளுக்கு. ஆனால் அது அவனுக்கு தெரிந்தால் பிரச்சனை இன்னும் பெரிதாகும் என்று அவளுக்கு தெரியும்.

"உன்னை எனக்கு சுத்தமா பிடிக்கல. அதுவும் உன் முகம்.. பார்க்கும்போதே அவ்வளவு ஆத்திரம். என் ஷூவில் இருக்கும் தூசிக்கு கூட மதிப்பு இருக்கு. ஆனா உனக்கு கிடையாது. நீ எனக்கு பொண்டாட்டியா வர போறது கிடையாது. எனக்கு அடிமையா, என் அம்மாவுக்கு சேவகியா, என் வீட்டுக்கு ஒரு வேலைக்காரியா வர போற. புரிஞ்சதா? உனக்கு நான் தர போற நரகத்தை பார்த்து அவளுக்கு இதயம் வெடிக்கணும்." என்றான் குந்தவியின் புகைப்படத்தைச் சுட்டிக் காட்டி.

சங்கவியின் கன்னங்களில் மௌனமாக வழிந்தது கண்ணீர். ராட்சசன் ஒருவன் பூமியில் பிறந்தது யார் தவறு? அந்த ராட்சசனை பற்றி அறியாமல் குந்தவி காதலித்தது யார் தவறு? திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கையில் அவள் வேறு யாருடனோ ஓடி போனது யார் தவறு? இவன் அவளை பழி வாங்க நினைத்து மொத்த குடும்பத்தையும் பழி வாங்க இங்கே வந்திருப்பது யார் தவறு?

சங்கவி யாரிடம் பதில் தேடுவாள்? பரலோகத்து கடவுளிடமா? 

"எதுக்கு இப்பவே அழற? இன்னும் அஞ்சி நாளுக்கு பிறகு நீ நிறைய அழணும். அதுக்காக இந்த கண்ணீரை சேமிச்சி வை." என்றவன் தனது சுட்டு விரலால் அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.

அவள் தன் அக்காவை போல அழகு இல்லை. அவளை போல புத்திச்சாலியும் இல்லை. காதலிக்கும் திறன் இல்லை. ஆண்களின் மனதை கவுக்கும் சூத்திரக்காரியும் இல்லை. அவ்வளவு ஏன் இன்னும் சமைக்க கூட கற்றுக் கொள்ளாதவள் அவள்‌. நான்கு நாட்கள் முன்புதான் அவளின் இளங்கலை படிப்பு முடிந்தது. 

வீட்டில் அவளும் குந்தவியும்தான் வாரிசுகள். அம்மா மகள்களுக்கு வேலைகள் வைத்ததே இல்லை. அதிலும் சங்கவியை குழந்தையை போலதான் வளர்த்தார்கள். ஓடி போகும் நாளுக்கு முன்னால் வரை தினமும் லாலிபாப் வாங்கி வந்து தங்கைக்கு தருவாள் குந்தவி. 

இவர்களின் பாசம் அவளின் மனதை மிக மெல்லியதாக மாற்றி வைத்திருந்தது. காலில் முள் குத்தினால் கூட அதை பிடுங்கி எறியும் முன் பத்து சொட்டு கண்ணீரை சிந்தி விடுவாள். அவளோடு ஒப்பிடுகையில் கண்ணாடியே பலமானது என்று சொல்லலாம்.

அப்படிப்பட்டவளைதான் வேட்டையாட வந்துள்ளான் ஆதீரன். அவளின் அக்காவை காதலித்து உருகியவன். மூன்று வருட காதல் இருவருக்கும். இரு வீட்டிலும் சம்மதம் பெற்று, ஊரெல்லாம் அழைப்பிதழ் வைத்து, திருமணத்திற்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த நேரத்தில் வீட்டை விட்டு சென்று விட்டாள் குந்தவி. டெய்லரிடம் செல்கிறேன் என்று சொல்லி சென்றவள் பிறகு திரும்பவில்லை.

அவளை தேட சொல்லி காவல்துறையில் புகார் தந்தான் ஆதீரன். தொடர்வண்டி நிலையத்தில் வேறு ஒரு இளைஞனின் கையை பிடித்தபடி குந்தவி நடந்துச் செல்லும் காட்சியும், அவள் வட மாநிலம் செல்லும் தொடர்வண்டி ஒன்றில் ஏறும் காட்சியும்தான் பதிலென கிடைத்தது.

அவ்வளவு காதலித்தவள் ஏன் ஓடி சென்றால் என்று தெரியாமல் பித்து பிடித்து போனான் இவன். அவளை வெட்டி போடும் அளவுக்கு கோபம் வந்தது. ஆனால் அவள் மீது வைத்திருந்த காதலின் காரணமாக அவளை எதுவும் செய்ய முடியவில்லை அவனால். தனக்குள் உருகி கரைந்து கடைசியில் அவளின் குடும்பத்தின் மீது திரும்பி விட்டான்.

தனது பணத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி அவளின் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்தி விட்டான். அப்போதும் கூட ஆத்திரம் தீரவில்லை. குந்தவி சங்கவியின் மீது கொண்ட பாசம் அவனுக்கும் தெரியும். அதனால்தான் சங்கவியை தனது பகடையாய் பிடித்தான்.

அழுது நின்றிருந்தவளின் தோளில் கை வைத்து பின்னால் தள்ளினான். தரையில் விழுந்தாள் சங்கவி. அவளின் விசும்பல் சத்தத்தை ஆசை தீர கேட்டவன் அவளின் முன் குனிந்தான்.

"காத்திரு." என்றுச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

சங்கவி முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். "அக்கா நீ எங்கே போன? உன்னாலதான் இவன் என்னை இப்படி இம்சிக்கிறான்?" என்று காற்றோடு புலம்பினாள்.

இது ஒரு அபாய பாதை என்று அவளுக்கு தெளிவாய் புரிந்தது. இந்த பாதையில் ஓரடி எடுத்து வைத்தாலும் அது தன் உயிரையும் சேர்த்து எடுத்துக் கொண்ட பிறகுதான் ரத்த வெறியை முடித்துக் கொள்ளும் என்று தெரிந்தது. ஆனால் விலக வழி தெரியவில்லை.‌ தப்பிக்க பாதை புலப்படவில்லை. 

ஆதீரனும், காந்திமதியும் வீடு வந்து சேர்ந்தனர். 

"இது என்னவோ எனக்கு சரியா படல. அக்காக்காரி ஓடி போயிட்டா. ஆனா உனக்கு அப்பவும் சொரணை இல்ல. தங்கச்சியை கட்டுற." வீட்டுக்குள் நுழைந்ததும் மகனை திட்ட ஆரம்பித்தாள் காந்திமதி.

"வேற என்னம்மா செய்ய சொல்றிங்க? எனக்கு பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு. எனக்கு இப்ப இந்த செகண்ட் குந்தவி வேணும். ஆனா அவ இல்லையே. நான் என்ன செய்வேன்? எனக்கு அவளோட மொத்த குடும்பத்து மேலேயும் பெட்ரோல் ஊத்தி கொளுத்தணும்ன்னு வெறியா இருக்கு." என்று வீடே அதிரும் படி கத்தினான். அவனின் கத்தலில் பயந்து வேலைக்காரர்கள் அவசரமாக அறைகளுக்குள் ஓடி மறைந்தனர்.

"என் ரத்தம் எப்படி கொதிக்குதுன்னு உங்களுக்கு தெரியாது. எனக்கு அவங்களை பழி வாங்கணும். அதுக்காகத்தான் இவளை கட்டிக்க போறேன். இனி தினமும் அவ அழ போறா. ரத்த கண்ணீர் விட போறா. அதை பார்த்து அவளோட குடும்பம் தானா சாக போகுது." என்றான் கர்ஜனையோடு.

காந்திமதி பயமும், கோபமுமாக மகனை முறைத்தாள். அவளுக்கு குந்தவியையே பிடிக்கவில்லை. அப்புறம் எப்படி பவளக்கொடியை பிடிக்கும்? 

ஆதீரன் பைனான்சியல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் என்ற இந்த ஒட்டு மொத்த சாம்ராஜ்யத்தையும் ஒற்றை ஆளாக நிறுவியவள் அவள். மகனின் மீது கொள்ளை பிரியம் கொண்டுள்ளவள்.‌ மகனுக்காக மொத்த உலகத்தையும் கொண்டு வருவாள். ஆனால் இந்த மருமகளைதான் முழு மனதோடு ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மகன் பட்டு திருந்துவான் என நினைத்தவள் தனது பணிகளை கவனிக்க சென்றாள். 

திருமண வேலைகள் நடக்க ஆரம்பித்தது. சங்கவி அறைக்குள் முடங்கி கிடந்தாள். அழுதுக் கொண்டே இருந்தாள். அவளும் ஓடி விடுவாளோ என்று சந்தேகப்பட்டு அந்த வீட்டை சுற்றி ஆட்களை காவலுக்கு வைத்தான் ஆதீரன்.

"சங்கவி நீ இங்கிருந்து எப்படியாவது தப்பிச்சி போயிடுமா." அம்மா சங்கவியின் முன்னால் நின்று கெஞ்சலாக சொன்னாள். 

தப்பிப்பது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனாலும் அதையும் தாண்டி தன் தாய் தந்தையரை பலி தர விரும்பவில்லை அவள்.

"வேணாம்மா. அவன் உன்னை கொன்னுடுவான்." அழுதபடி சொன்னாள்.

"நீ அவனை கல்யாணம் செஞ்சிக்கிட்டா அப்புறம் என்ன நடக்கும்? அப்பவும் பழி வாங்குவான். கொஞ்சம் கொஞ்சமா கஷ்டத்தை அனுபவிச்சி சாவதை விட சட்டுன்னு நல்ல முறையில் சாகறதுதான் நல்லது." என்றாள் அம்மா.

சங்கவி அம்மாவை கட்டிக் கொண்டு அழுதாள். 

"அம்மா, அக்கா ஏன்ம்மா ஓடிப் போனா?" 

ருக்மணி குந்தவியின் புகைப்படத்தைப் பார்த்தாள். நெஞ்சம் விம்மியது அவளுக்கு. 

"அவளுக்கு என்ன பிரச்சனையோ யார் கண்டா?" என்றாள். சங்கவி சட்டென்று அம்மாவை நிமிர்ந்துப் பார்த்தாள். அம்மா சொன்னதில் அர்த்தம் இருப்பது போலிருந்தது. அக்கா பொறுப்பானவள். யாரையும் மனம் நோகடிக்க மாட்டாள். தங்கையிடம் கூட அதட்டி பேச மாட்டாள். அவள் ஓடி போனது பற்றி முதல் முறையாக சந்தேகம் வந்தது சங்கவிக்கு.

'ஒருவேளை ஆதீரன் கொடுமை பண்ணியிருப்பானா? அதனாலதான் அக்கா ஓடிட்டாளா? என்னையே இப்படி மிரட்டுறான். அவளை எப்படியெல்லாம் கொடுமை செஞ்சானோ.' என்று யோசித்து பயந்தாள்.

"உன்னை அவன் சித்திரவதை செய்வான் சங்கவி. நீ இப்ப அழுறதையே எங்களால பார்க்க முடியல. அவன் கோபத்துல அறைஞ்சி நீ கன்னம் வீங்கி வந்தா அப்புறம் உன் அப்பா அப்படியே உயிரை விட்டுடுவாரு." என்றாள் சிறு அழுகையோடு.

அம்மாவை அணைத்துக் கொண்ட சங்கவி "அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான் அம்மா." என்றாள். அந்த தைரியம் தனக்கு தானே சொல்லிக் கொள்வது போலிருந்தது. கரும்பு மெஷின் என்று தெரிந்தே கை கொடுத்தவனை போலதான் இருந்தது அவளின் நிலமையும்.

தொடரும்..

Post a Comment

0 Comments