Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 47

 மொத்த வீடும் அமைதியாக இருந்தது. யவனா தன் அண்ணியை தேடி வந்தாள்.


"எப்பவும் ரூம்லயே இருக்கிங்க.." என்றபடி உள்ளே‌ வந்தாள்.


"தனிமையே பிடிக்காது. ஆனா எங்க அப்பா மேல இருக்கும் பயத்துல இப்ப தனிமையை தவிர வேறு எதுவும் பிடிக்கல.." என்றாள் கவலையாக.


யவனாவுக்கும் கவலையாக இருந்தது. "உங்க அப்பாவோட கோபம் சீக்கிரம் போயிடும்.." என்றாள்.


மறுப்பாக தலையசைத்தாள். "எங்க அப்பாவை பத்தி உனக்கு தெரியாது.. அவருக்கு கோபம் வந்தா இந்த வீடே தலைகீழா மாறிடும். என்னை செத்தாலும் ஏத்துக்க மாட்டாரு.. என் அம்மாவுக்கு வருசம் முழுக்க திட்டு விழும். என்னாலதான் எல்லாம்..." என்று வருந்தினாள்.


அவளின் தோளை தட்டி தந்தாள் யவனா.


"என் அம்மாவை அவர் திட்டும் ஒவ்வொரு முறையும் அவங்களுக்கு பதிலா நான் இங்கே அழ போறேன்.." என்றாள் கண்ணீரோடு.


அண்ணியின் கண்ணீர் கண்டு யவனாவிற்கு வருத்தம் மேலிட்டது.


இவளை எப்படியாவது அவளின் குடும்பத்தோடு சேர்த்து வைத்து விட வேண்டுமென்று நினைத்தாள். அண்ணனின் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். அண்ணனின் மீது வைத்திருந்த பாசம் அண்ணியின் மீது தானாய் மலர்ந்து விட்டது.


தாரணி கவலையிலேயே அமர்ந்திருந்தாள். யவனா அங்கிருந்து கிளம்பினாள். யோசித்தாள். என்ன செய்யலாம் என்று மூளையை கசக்கினாள். அவர்கள் வீட்டிற்கு சென்று பேசி பழகி அவர்களோடு தங்கி கொஞ்சம் கொஞ்சமாக தன் வீட்டு பெருமை பேசி அவர்களை சமாதானம் செய்து விடலாமா என்று யோசித்துப் பார்த்தாள். அதுதான் சரியென்று தோன்றியது.


குந்தவியின் அருகில் அமர்ந்திருந்தான் யஷ்வந்த். "உங்களுக்கு வேலை இல்லையா சார்.?" சந்தேகத்தோடு கேட்டாள் அவள்.


"இருக்கு.. ஆனாலும் உன்னோடு டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கேன்.. நீ யஷ்வந்த்ன்னு என்னை கூப்பிடு.."


"இப்படியே இருக்கட்டும் சார்.." என்றவளை முறைத்தவன் "நாம பிரெண்ட்ஸ் குந்தவி.. பேர் சொல்லி கூப்பிடுறது தப்பு கிடையாது.." என்றவனின் பேச்சை காதில் வாங்காதவள் "என்னோட பேப்பர்ஸ் தயாராச்சா சார்.?" எனக் கேட்டாள்.


"ஆகிட்டே இருக்கு.. சீக்கிரம் தயார்.. உன்னை இந்த நாட்டோட குடிமகளா காட்டுவது உண்மையிலேயே கஷ்டமான விசயமா இருக்கு. ஆனா இந்த கஷ்டத்திலும் ஒரே சந்தோசம் லஞ்சம் வாங்கிட்டு கேட்டதை செஞ்சி‌ தர சில ஆபிசர்ஸ்தான். என் வாழ்நாள்ல லஞ்சத்துக்கு தேங்க்ஸ் சொன்னது இப்பதான்.." என்றான்.


குந்தவி சிரித்தாள்.


மனோகர் தன் தங்கைக்கு அழைத்தார்.


வழக்கமான விசாரிப்புகளை முடித்துக் கொண்டவர் "சூர்யாவுக்கும் தர்ஷினிக்கும் மேரேஜ்‌ பண்ணி வைக்கலாமா பூங்கொடி.?" எனக் கேட்டார்.


பூங்கொடியில் சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை.


"இரண்டு கம்பெனியையும் ஒன்னா இணைச்சிடலாம்.. உங்க கம்பெனிக்கு இந்தியாவுல இருந்து முழு சப்போர்ட் கிடைக்க தேவையான‌ எல்லாத்தையும் செய்வேன் நான். பிசினஸ் வளரும்.." என்றார்.


மகன் தன் காதலை சொன்ன நேரம் நினைவில் வந்தது பூங்கொடிக்கு. 


"இல்லன்னா இது சரியா வரும்ன்னு தோணல.. சூர்யாவுக்கு‌ தர்ஷினி மேல எந்த இன்ட்ரஸ்டும் இல்ல.. சிஸ்டரை போலதான் நினைச்சிட்டு இருக்கான்.."


"எல்லோரும் எல்லார்க்கிட்டயும் பொண்டாட்டியாவே நினைச்சி பழக முடியாது பூங்கொடி. நீ அலெக்ஸ்கிட்ட போனை கொடு.. நான் பேசிக்கிறேன்.." என்றார்.


பூங்கொடி தயக்கத்தோடு கணவனை தேடிச் சென்றாள். கட்டிலில் சோர்ந்து படுத்திருந்தார்.


"என் அண்ணா உங்களோடு பேசணுமாம் அலெக்ஸ்.." என்றவள் போனை ஸ்பீக்கரில் வைத்தாள்.


"மச்சான்.." 


"அலெக்ஸ்.. சூர்யாவுக்கும் தர்ஷினிக்கும் மேரேஜ்‌ பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன்.. நீங்க இதை பத்தி என்ன சொல்றிங்க.?" எனக் கேட்டார் இவர்.


"சாரி மச்சான்.. எங்களுக்கு விருப்பம் இல்ல. என் மகன் வேற ஒரு பொண்ணை லவ் பண்றான்.. அவளைத்தான் கல்யாணம் செஞ்சிப்பான்.. நீங்க தர்ஷினிக்கு வேற இடம் பாருங்க.. நானும் கூட பார்த்து சொல்லட்டா.?" எனக் கேட்டார்.


மனோகருக்கு முகம் கறுத்து விட்டது.


"யார் அந்த பொண்ணு.? தர்ஷினியை விட ரொம்ப அழகா.?" எனக் கேட்டார் எரிச்சலை மறைத்தபடி.


"அழகு முக்கியமா.? என் மகனுக்கு பிடிச்சிருக்கு. அவன் வாழ்க்கையில் யாரை தேர்ந்தெடுக்கணும்ன்னு அவனுக்கு தெரியும்.." என்று அவர் சொல்லிய அதே நேரத்தில் அந்த அறைக்குள் வந்தான் சூர்யா.


"உங்க பையனால கம்பெனியையே ஒழுங்கா மேனேஜ் பண்ண தெரியாமதான் முழுசா நட்டத்துல போய்ட்டு இருக்கு.. இதுல அவன் லவ் ஒன்னுதான் குறைச்சலா.? உங்க பையனுக்கு ப்ரீடம் தருவதா நினைச்சி உங்க கம்பெனியை முழுசா இழுத்து மூடிட்டு போயிடாதிங்க.. கம்பெனியை காப்பாத்திக்கற வழியை பாருங்க.." என்ற மனோகர் அழைப்பை துண்டித்துக் கொண்டார்.


சூர்யா தலைகுனிந்து நின்றிருந்தான். அவமானம் பிடுங்கி தின்றது. கோபத்தில் முகமும் கழுத்தும் சிவந்து போனது.


அங்கிருந்து திரும்பி நடந்தான்.


"சூர்யா.." தந்தையின் அழைப்பை கூட கண்டுக் கொள்ளாமல் வெளியே நடந்தான். தனது அறைக்குள் வந்து கதவை சாத்தினான். அறையின் மூலையில் சென்று அமர்ந்தான். முட்டிக்காலை கட்டியபடி கூரையை பார்த்தவனுக்கு மனோகர் சொன்னது காதுக்குள்ளே சுற்றி வந்தது.


'தகுதி இல்லாதவனா போய்ட்டு இருக்கேன்.. எதுக்கும் உதவாதவன்.. உதவாக்கரையா மாறிட்டு இருக்கேன்..' என்று புலம்பி‌ தீர்த்தான்.


மனோகர் யோசனையோடு சுற்றினார். சூர்யாவுக்கு தர்ஷினியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக‌‌ இருந்தார். என்ன மாதிரியான நடவடிக்கை சூர்யாவையும் அவனது பெற்றோரையும் வழிக்கு கொண்டு வரும் என்று யோசித்தார்.


மாலையில் யஷ்வந்த் வீடு வந்ததும் அவனை அழைத்தார். ஹாலில் அமர்ந்திருந்தவர் அழைத்ததும் வீட்டிலிருந்த மற்றவர்களும் கூட வந்து விட்டனர். குந்தவி ஓரமாக நின்றாள்.


"சூர்யாவுக்கும் தர்ஷினிக்கும் மேரேஜ்‌ பண்ணி வைக்கலாம்ன்னு முடிவு பண்ணியிருக்கேன் நான்.. ஆனா அவன் யாரையோ லவ் பண்றானாம். உன் அத்தையும் மாமாவும் என் பேச்சுக்கு ஒத்துக்க மாட்டேங்கிறாங்க.. உன் காதலாலதான் என் திட்டம் முழுக்க வீணா போச்சி. சூர்யாகிட்ட பேசி அவனை சம்மதிக்க‌ வை.. அவன் தர்ஷினியைதான் கல்யாணம் செய்யணும்.. அவனோட லவ்வர் யாருன்னு கண்டுபிடிச்சி சொல்லு.. தூக்கிடலாம்.. இந்த முறையும் என் திட்டம் தோத்து போச்சின்னா கடுப்பாகிடுவேன்.." என்றவர் எழுந்து போனார்.


"பைத்தியமா இவர்.? அவனோட மனசை எப்படி என்னால மாத்த முடியும்.? அவனுக்கு மனசு இல்லையா.? அதுல அவனுக்கு காதல் இல்லையா.? எப்பவும் அடுத்தவன் குடியை கெடுக்கறதுதான் இவருக்கு வேலையா.?" என்று திட்டி தீர்த்தான் யஷ்வந்த்.


குந்தவியின் முகம் பார்த்தான். ரத்த ஓட்டமே இல்லை அவள் முகத்தில். சுற்றி அனைவரும் இருந்தார்கள். அதனால் அமைதியாக இருந்தான்.


குந்தவி அங்கிருந்து சென்றாள். தர்ஷினி கோபத்தோடு சோபாவில் அமர்ந்தாள்.


"அதெப்படி அவன் யாரோ ஒருத்தரை லவ் பண்ணலாம்.?" என்றாள் கோபத்தோடு.


யஷ்வந்த் தங்கையை முறைத்தான்.


"ஏன்.? அவனுக்குன்னு எந்த பீலிங்க்ஸ்ம் இருக்க கூடாதா.?" எனக் கேட்டான் எரிச்சலாக.


"ஆனா நான் அவனை லவ் பண்றேன்.." என்றவளை சந்தேகமாக பார்த்தவன் "நிஜமாவா.? ஆனா இது எப்போதிலிருந்து.?" என்றுக் கேட்டான்.


"இப்ப அப்பா சொன்னதுல இருந்து.." என்றவளை வெறித்தவனுக்கு அவளின் தலையில் ஓங்கி கொட்ட வேண்டும் போல கோபம் வந்தது.


"அவன் ஒரு பொண்ணை லவ் பண்றான்னு அப்பா தெளிவாதான் சொன்னாரு.. நீ உன் இஷ்டத்துக்கு எதையாவது கற்பனை பண்ணி வச்சிக்காத தர்ஷினி.. அவனும் மனுசன்தான்.‌ அவனுக்கும் வாழ்க்கையோட இன்ப துன்பம் பத்தி யோசனை இருக்கும். நீ உனக்குள்ள ஆசையை வளர்த்துக்காத.." என்றவன் கோபத்தோடு நகர்ந்தான்.


சூர்யா அதே இடத்தில்தான் அமர்ந்திருந்தான். அம்மா இரண்டு மூன்று முறை வந்து கதவை தட்டி சென்றிருந்தாள். 


சோகத்தோடு இருந்தவனின் கைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். குந்தவிதான். அழைப்பேற்று காதில் வைத்தான்.


"ம்ம்.. என்ன செய்றிங்க.?" வழக்கமான தயக்கத்தோடு ஆரம்பித்தாள்.


"சும்மா.. நீ.?"


"நானும் சும்மாதான்.." என்றவள் சற்று நேரம் தயங்கி விட்டு "நீங்க உண்மையிலேயே என்னை லவ் பண்றிங்களா.?" எனக் கேட்டாள்.


"உண்மையா பண்ணல.. கற்பனையில் பண்றேன்.." என்றவனின் குரலில் இருந்தது எரிச்சலா கோபமா என்று அவளால் அறிய முடியவில்லை.


"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டிங்களே.." அவள் சொல்லும் விதமே கோபம் தர கூடிய ஒன்றாகதான் இருந்தது.


"இல்ல சொல்லு.."


"நீங்க தர்ஷினியை மேரேஜ் பண்ணிக்கங்க.. உங்க நட்டமெல்லாம் சரியா போயிடும். உங்க டென்சனும் தீர்ந்துடும்.." என்றவளிடம் "அப்படின்னா உன்னை என்ன செய்யட்டும்.? சின்ன வீடா வச்சிக்கட்டா.?" என்றான் ஆத்திரத்தோடு.


குந்தவி பதில் சொல்லவில்லை. 


"என் மேல என் மாமா நம்பிக்கை வைக்கல. ஆனா என் பேரண்ட்ஸ் வச்சிருக்காங்க.. அதனாலதான் அவர் சம்பந்தம் பேசும்போது கூட என் காதலை காரணம் காட்டி வேணாம்ன்னு சொன்னாங்க.. ஆனா நீ என் மேல துளியும்‌ நம்பிக்கை வைக்கல. நான் தோத்துடுவேன்னு நம்புற இல்ல.? என் மாமாவை போலவே நீயும் என்னை சீப்பா எடை போடுற.." 


குந்தவி முகத்தை துடைத்துக் கொண்டாள்.


"நான் அப்படி சொல்ல வரல.." என்றவளை மேலே பேச விடவில்லை அவன்.


"வேற எப்படி சொல்ல வந்த.? உன்னை ரொம்ப லவ் பண்றேன்.. ஆனா உனக்கு என்னை பார்த்தா விளையாட்டு பையன் போல தெரியுது.. ரோட்டுல பார்த்து படுக்கையை பர்ஸ்ட்ல ஷேர் பண்ணிட்டு அப்புறம் லவ் வந்ததால நீ என்னை நம்பல.. உன்னை நான் எந்த அளவுக்கு நம்புறேனோ அந்த அளவுக்கு நீ என்னை நம்பல.. தயவுசெஞ்சி இனி என்னோடு பேசிடாதே.. ஐ ஹேட் யூ.." என்றவன் இணைப்பை துண்டித்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


LIKE


COMMENT


SHARE


FOLLOW






Post a Comment

0 Comments