மோகனுக்கு காலை உணவை தந்தாள் சங்கவி.
"உன் அம்மாவோட கல்லறை இருக்கும் இடம் சொன்ன.. உன் அக்காவோட கல்லறை எங்கே.?" எனக் கேட்டார் அவர் உணவை முடித்துக் கொண்டு.
"அது.. அப்பா அது அக்காவோட பாடியை அங்கேயே எரிச்சிட்டாங்க.." தலை குனிந்துச் சொன்னாள்.
"என் பொண்ணு அனாதை போல இறுதி மரியாதை கூட இல்லாம போயிருக்கா.." என்று வருந்தினார்.
"சாரிப்பா.." என்றவளை கவலையாக பார்த்தவர் "என்னாலதான் இத்தனையும்.. நான் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா உன் அக்காவும் ஓடியிருக்க வேணாம். உன் லைப்பும் நல்லா இருந்திருக்கும்.." என்றார்.
"பீல் பண்ணாதிங்கப்பா.. உங்க உடம்புக்கு அது நல்லதில்ல.." என்றவள் அவருக்காக மருந்துகளை தந்தாள்.
அவரின் சோகம் தீரவில்லை.
படுக்கையில் சாய்ந்துக் கொண்டவருக்கு போர்வையை போர்த்தி விட்டாள்.
"நீயாவது நல்லா இருக்கணும் சங்கவி.. சந்தோசமா வாழணும்.." முனகியபடியே விழிகளை மூடினார்.
"நான் மார்கெட் போய்ட்டு வரேன்ப்பா.. உங்களுக்கு ஏதாவது தேவையா.?" எனக் கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தார்.
"பத்திரமா போய்ட்டு வா.." என்றார்.
சங்கவி வெளியே நடந்தாள். காய்கறி கூடையை எடுத்துக் கொண்டாள். பவளம் எழுதி வைத்திருந்த காய்கறி பட்டியலை ஒரு முறை சரி பார்த்தபடி கிளம்பினாள்.
சாலையில் இறங்கியவளின் முன்பே வந்து நின்றது கார். ஆதீரன் அவளுக்காக கதவை திறந்தான். உள்ளே ஏறி அமர்ந்தவளை ஆதுரத்தோடு பார்த்தவன் காரை கிளப்பினான்.
சற்று தூரம் சென்ற பிறகு காரை நிறுத்தினான் ஆதீரன். அவளின் கையை பற்றினான்.
"சங்கவி.." அவளின் புறங்கையில் முத்தமிட்டான். அவளின் விரல் நகங்கள் ஒவ்வொன்றுக்கும் முத்தம் தந்தான்.
"ஐ மிஸ் யூ.. இரண்டு நாள்.. இதுவே முடியல சங்கவி.." தனது சீட் பெல்டை கழட்டியவன் அவளின் மடியில் படுத்தான்.
"நீ வேணும்மா.. பக்கத்துல வேணும். நான் ஆபிஸ் போய்ட்டு வந்ததும் எனக்காக காத்திருக்கும் உன்னோட காதல் கண்கள் வேணும். நீ பேசும் வார்த்தைகள் எப்போதும் என் காதுல கேட்டுக்கிட்டே இருக்கணும்.." என்றான்.
சங்கவி அவனின் தலையை வருடி தந்தாள். அவனின் நெற்றியில் முத்தமிட்டாள். நெகிழ்ந்தான் அவன்.
"இது மாதிரியான முத்தங்கள் தினமும் கோடி வேணும்.." என்றவனை பார்த்து மென்னகை புரிந்தவள் "நானும் உங்களை மிஸ் பண்றேன் மாமா.." என்றாள்.
அவளின் உள்ளங்கையை எடுத்து தன் முகம் மீது வைத்தான். உள்ளங்கையில் முத்தமிட்டான்.
"நான் லேட்டா போனா எங்க அப்பா சந்தேகப்படுவார் மாமா.." தயங்கியபடி சொன்னாள்.
வருத்தம் மறைத்தபடி எழுந்தான். மார்கெட் நோக்கி சென்றது கார்.
வழியெங்கும் அவளிடம் உரையாடினான். அவளது கையை விடாமல் காரை ஓட்டினான்.
மார்கெட்டில் அவள் வாங்க வேண்டிய அனைத்தையும் அவனே வாங்கி தந்தான். அவளை தூக்க விடவில்லை.
கார் மீண்டும் வீடு நோக்கி திரும்பியது.
"உங்க அப்பா எப்ப என்னை ஏத்துப்பாரு.?" கவலையாக கேட்டான்.
"கொஞ்ச நாள் மாமா.." என்றவள் வீடு வந்து விடவும் அவனை பிரிந்துச் செல்ல தயங்கினாள்.
"நா.. நான் போறேன் மாமா.." என்றவளின் கன்னம் கிள்ளியவன் "சீக்கிரம் வந்துடுறேன் மாமான்னு சொல்லு.." என்றான்.
புன்னகைத்தவள் "சீக்கிரம் வரேன் மாமா.." என்றாள்.
ஆனாலும் இறங்க தயங்கினாள்.
"என்னாச்சி சங்க.."
அவனின் தாடையில் இதழ் பதித்தாள். விலக மனமில்லாமல் போய் விட்டது. கண்களை மூடியபடி அவன் மீது சாய்ந்தாள். ஆதீரன் மிடறு விழுங்கினான். அவளின் கன்னங்களை அள்ளினான். அவளின் இதழில் தன் இதழ் பதித்தான். விழிகளை மூடியபடி தனியொரு உலகிற்குள் நுழைந்து விட்ட இருவருக்குமே விலகுவது சிரமமாக இருந்தது. நிஜ உலகை வெறுத்தனர்.
அவனே சில நிமிடங்களுக்கு பிறகு அவளை விட்டு விலகினான். அவளின் கன்னத்தை வருடியவன் "உங்க அப்பாவை நான் புரிஞ்சிக்கிறேன் சங்கவி. நான்தான் தப்பு பண்ணிட்டேன். அவர் தரும் தண்டனையை வாங்கிக்க எனக்கு முழு உரிமையும் இருக்கு. நீ திரும்பி வரும்வரை நான் உன்னை நினைச்சிட்டேதான் இருப்பேன்." என்றான்.
சங்கவி அவனின் கலைந்த தலையை சரி செய்து விட்டாள். வளையல்கள் விளையாடிக் கொண்டிருந்த அவளின் கரத்தினை பற்றியவன் அவளின் வளையல்கள் மீது முத்தமிட்டான்.
"டேக் கேர்.." என்றான்.
விலக துளியும் மனமில்லை. சிரமப்பட்டு விலகினாள்.
அவள் வீட்டிற்குள் நுழைந்தபோது அப்பா உறக்கத்திலேயேதான் இருந்தார். மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்த ரோஜாவை அக்காவின் புகைப்படத்தின் அருகே வைத்தாள்.
"ஐ மிஸ் யூ அக்கா.." என்றாள்.
"ஐ மிஸ் யூ சங்கவி.." மதிய உணவை உடைவேளையில் மாத்திரையை விழுங்கியபடியே முனகினாள் குந்தவி. விடுமுறை எடுத்துக் கொள்ள சொல்லி யஷ்வந்த் இம்சை செய்திருந்தான். ஆனால் இவள்தான் அடம் பிடித்து கிளம்பி வந்திருந்தாள். காலையிலிருந்து சூர்யா அழைக்கவில்லை. இரவு தான் உளறியதில் கோபமாக இருக்கிறான் என்று புரிந்துக் கொண்டாள். ஆனால் அவனுக்கு அழைத்து சாரி சொல்லதான் தயக்கமாக இருந்தது.
தனது இருக்கைக்கு வந்து அமர்ந்தவள் பைல்களை புரட்ட ஆரம்பித்தாள்.
இன்று முழுக்க யஷ்வந்த் இவளிடம் வந்து அறுவை போடவில்லை. அதுவே பெரிய நிம்மதியாக இருந்தது அவளுக்கு.
யஷ்வந்த் தன் கையில் திணிக்கப்பட்ட வேலைகளின் மீது கவனமாக இருந்தான். மனோகர் அவனுக்கு அளவுக்கு அதிகமான வேலைகளை தந்திருந்தார். அவனும் தன்னால் முடிந்த அளவுக்கு வேலைகளை வேகமாக முடிக்க முயன்றுக் கொண்டிருந்தான்.
"இன்னைக்கு நம்ம ப்ளான் சக்ஸஸ்தானே.?" எனக் கேட்ட மருமகளிடம் கட்டை விரலை உயர்த்திக் காட்டினார் மனோகர்.
இன்று இரவு வரை யஷ்வந்தால் தனது இருக்கையை விட்டு நகர முடியாது. தனியாய் வீடு செல்லும் குந்தவியை காரோடு சேர்த்து தூக்கி விடலாம் என்று திட்டமிட்டு இருந்தனர் இருவரும்.
பணி தரும் அனுபவத்தில் மூழ்கி போயிருந்த குந்தவிக்கு நேரம் போனதே தெரியவில்லை.
"மேடம்.." அழைப்புச் சத்தத்தில் நிமிர்ந்தாள். யஷ்வந்தின் பாடிகார்டுகளில் ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் இனி இவளின் நிழலாக இருக்க வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான் யஷ்வந்த்.
"வீட்டுக்கு கிளம்பலாமா மேடம்.?" எனக் கேட்டான்.
குந்தவி பைல்களை மூடி வைத்து விட்டு எழுந்தாள்.
"ம்ம்.." என்றவள் முன்னால் நடந்தாள்.
பாடிகார்டாக வந்தவனேதான் காரை கிளப்பினான்.
கார் அங்கிருந்து கிளம்பிய அதே நேரத்தில் யஷ்வந்தின் போனுக்கு அழைப்பு ஒன்று வந்தது.
"ஹலோ.." என்றவனிடம் "ஹலோ யஷூ.. நேத்து நடந்த லிஃப்ட் விபத்து சாதாரண விபத்து இல்ல. அது திட்டமிட்ட செயல்.. நூறு சதவீத உறுதி இப்ப.. ஆள் தெரியல. ஆனா நீங்க கவனமா இருக்கணும்.." என்றான் இந்த வழக்கை விசாரிக்க வந்தவன்.
யஷ்வந்த் அதிர்ச்சியோடு எழுந்து நின்றான்.
"எனக்கென்னவோ டார்கெட் அந்த பொண்ணுன்னுதான் தோணுது.." கேர்புல்லா இருக்க சொல்லு அவங்களை.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொள்ள யஷ்வந்த் நெற்றியை பிடித்தான்.
தாரணி தன்னிடம் தரப்பட்ட குளிர்பானத்தை பருகியபடி அமர்ந்திருந்தாள். அவளையே நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார் மனோகர்.
'இவளோட புத்தி எனக்கு பிடிச்சிருக்கு. ஆனா எனக்கு காலமெல்லாம் மருமகளா இருப்பாளா.? குந்தவியை போட்டு தள்ளியதும் இவளையும் போட்டு தள்ளிடலாமா.? பணம் கிடைக்கும். ஆனா இவளை போல புத்திக் கொண்ட பெண் கிடைப்பாளா.?' என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தார்.
தாரணியின் எண்ணமெல்லாம் எப்போது குந்தவி இறப்பாள் என்றே இருந்தது. அவளின் அந்த எண்ணத்தை கலைக்கும் விதமாக அவளின் போன் ஒலித்தது. எடுத்தாள்.
"மேம்.." எதிரில் யஷ்வந்தின் தலைமை பாடிகார்ட் அழைத்தான்.
"சொல்லுங்க.." என்றவளிடம் "வீட்டுக்கு வரும் வழியில் கார் ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சி மேம்.." என்றான் அவன்.
தாரணி நிம்மதியில் சிறு மூச்சு விட்டாள்.
"யஷூ சாரும் குந்தவி மேமும் சேப்பா இருக்காங்க.." என்று அவன் சொல்லவும் அதிர்ந்து எழுந்தாள்.
"யஷூவும் கார்ல இருந்தாரா.?" எனக் கேட்டாள்.
"ஆமாங்க மேம்.. வழக்கம்போல அவர்தான் காரை ஓட்டி வந்தாரு.. நடு வழியில் லாரி ஒன்னு வந்து மோதிடுச்சி. யஷூ சார் கவனமா காரை வளைச்சி நிறுத்திட்டாரு. இல்லன்னா பெரிய சேதம் ஆகியிருக்கும்.." என்றான்.
வியர்த்து விட்ட நெற்றியோடு போன் இணைப்பை துண்டித்தவள் தனது மாமனாரை பார்த்தாள்.
"குந்தவி தனியா போகல.. உங்க பையனும் கார்ல போயிருக்காரு.." என்றாள்.
அதிர்ச்சியில் எழுந்து நின்றார் மனோகர்.
"அப்புறம்.."
"இரண்டு பேரும் சேப்பா இருக்காங்களாம்.."
"அவனுக்கு ஏன் இந்த திமிர்.?" எனக் கேட்டவர் இருந்த வேலைகளை அப்படியே வைத்து விட்டு கிளம்பினார்.
"நானும் கிளம்பறேன்.." என்று அவனுக்கும் முன்னால் ஓடினாள் தாரணி.
இருவரும் வீடு வந்து சேர்ந்தபோது யஷ்வந்தும் குந்தவியும் வந்திருக்கவில்லை. மாறாக விசயம் அனைவருக்கும் தெரிந்து விட்டது. வீடே களீபரமாக இருந்தது.
யஷ்வந்தும் குந்தவியும் வீடு வந்தனர். யஷ்வந்தின் நெற்றியில் ப்ளாஸ்திரி இருந்தது. குந்தவியின் வலது கையில் ஒரு கட்டு இருந்தது.
"யஷூ.." அருகே ஓடி வந்தாள் தாரணி.
"அடிபடலன்னு சொன்னாங்க.. ஆனா இப்படி அடிப்பட்டு வந்திருக்க.." என்றவள் அவனின் கன்னம் வருடினாள்.
"ஒன்னும் ஆகல தாரு.. இது சின்ன கீறல்தான். நீ டென்சன் ஆகாத.." என்றவன் "குந்தவி நீ போய் ரெஸ்ட் எடு.." என்று அனுப்பி வைத்தான்.
குந்தவி அவர்களை தாண்டி நடந்தாள்.
"எப்படி ஆக்ஸிடென்ட் நடந்தது.?" கவலையாக கேட்டாள் யவனா.
"லாரி குறுக்க புகுந்துடுச்சி.." என்றவன் அங்கிருந்து நகர்ந்தான். அவனுக்கு யார் இந்த எதிரி என்ற யோசனைதான் அதிகமாக இருந்தது. எப்படி அவர்களை கண்டுபிடிப்பது என்ற யோசனையில் இருந்தான்.
குந்தவியை யாரோ கொல்ல பார்க்கிறார்கள் என்பது தெளிவாய் புரிந்துப் போனது அவனுக்கு. அவளின் இறந்தகாலம் பற்றி தெரியாதவனுக்கு இதில் அவளின் இறந்தகாலத்தை சேர்ந்த யாராவது காரணமாக இருப்பார்களோ என்று சந்தேகம் வந்தது.
குந்தவி அலுவலகத்தை விட்டு தாண்டும் முன்னரே போன் செய்து காரை நிறுத்த சொல்லி விட்டான் யஷ்வந்த். அவளிடம் ஓடினான். அவனே காரை எடுத்தான்.
"ஏன் சார்.?" எனக் கேட்டவளிடம் "சும்மாதான்.. வேலை முடிஞ்சது.." என்றவன் வழக்கமான அதே சாலையில் காரை ஓட்டினான். லாரியை அவன் எதிர்பார்க்கவேயில்லை.
இப்போது இந்த விசயத்தை எப்படி சூர்யாவிடம் சொல்வது என்று கவலையாக இருந்தது அவனுக்கு.
அன்று இரவு மனோகரின் ஆபிஸ் அறையில் பயத்தோடு அமர்ந்திருந்தாள் தர்ஷினி.
"அண்ணனோட உயிருக்கு ஏதும் ஆக கூடாது அப்பா.. எனக்கு சூர்யா கூட வேணாம்.. ஆனா அண்ணன் இருந்தா போதும்.." என்று சொன்னவள் கிளம்பி விட்டாள்.
தன் மருமகளை பார்த்தார் அவர்.
"நீ என்ன சொல்ற.?" என்றார்.
"யஷூவுக்கு எதுவும் ஆகாம அவளை தீர்க்கணும்.." என்றாள் தீர்க்கமாக.
மனோகர் யோசித்தார். திட்டமொன்றோடு நிமிர்ந்தார்.
"நீயும் யஷூவும் ஹனிமூன் கிளம்புங்க.." என்றார்.
அவள் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அவரை பார்த்தாள்.
"நீங்க திரும்பும் முன்னாடி நான் அவளை தீர்த்து கட்டிடுறேன்.." என்றார்.
தாரணி யோசித்தாள். இது நல்ல ஐடியாவாகதான் இருந்தது.
"சரி.." என்றவளுக்கு ஹனிமூனை நினைத்துதான் நடுக்கமாக இருந்தது.
குந்தவியின் காய்ச்சல் குறையாமல் அன்றிரவு அதிகரித்து விட்டது.
"சொல் பேச்சு கேட்கல நீ. திமிர் உனக்கு.." என்று திட்டினான் யஷ்வந்த்.
குந்தவி எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவளுக்காக பூங்கொடி போன் செய்தாள். தாலாட்டு பாடினாள். சூர்யா அழைக்காதது வருத்தம் தந்தது. ஆனால் தன் மீது தவறு இருக்கையில் அவனை குறை சொல்லி பயன் இல்லை என்று தனக்குதானே சமாதானம் செய்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் தன் அண்ணனிடம் சிம்லா செல்வதற்கு டிக்கெட்டுகளை நீட்டினாள் யவனா.
"என் கிஃப்ட் அண்ணா.. ஹனிமூன் டிக்கெட்.. ஹோட்டல் கூட புக் பண்ணிட்டேன்.." என்றாள். தனது பெரியப்பாவின் விளையாட்டில் தான் அப்பாவியாய் செயல்படுவதை கூட அறியவில்லை அவள்.
அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே
LIKE
COMMENT
SHARE
FOLLOW
0 Comments