Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 59

 "சார்.." பாடிகார்டின் அழைப்பில் பார்வையை திருப்பினான் யஷ்வந்த்.


"உங்க போன் ரிங்காகுது சார்.." 


அவன் சொன்ன பிறகே நினைவு வந்து போனை எடுத்தான். 


"சூர்யா.."


"உங்க அப்பா என் செல்லாவை கொல்ல டிரை பண்ணிட்டாரு யஸ்வேந்த்.. அவ பிழைப்பாளான்னு எனக்கு தெரியல.." என்றான் ஒரு மாதிரி குரலில்.


"பாடிகார்ட்ஸ் பாதி பேரை விட்டுட்டு வந்தேன் மச்சான். எப்படி இப்படி ஆச்சின்னு தெரியல. இங்கே தாரணியையும் கொல்ல ஆள் அனுப்பி இருக்காரு. இவளுக்கு கையில வெட்டு. ரத்தம் ரொம்ப போயிடுச்சி. ஆபரேசன் தியேட்டர்ல இருக்கா.. நான் இங்கே வந்திருக்கவே கூடாது. தப்பு பண்ணிட்டேன்.." என்று தலையை பிடித்தான். 


"நான்தான் தப்பு பண்ணிட்டேன். பிசினஸை காரணம் சொல்லி அங்கே வராம இருந்திட்டேன். அதுக்கு பலனை இன்னைக்கு அனுபவிக்கிறேன்.. உன் அப்பாவுக்கு மனசாட்சி கொஞ்சமும் இல்ல யஸ்வேந்த். எப்படி தெரியுமா என் செல்லாவை அட்டாக் பண்ணாரு.? கட்டையால அவ தலையில நாலு முறை அடிச்சிட்டாரு யஸூ.." என்றான் விரிசல் விட்ட குரலில்.


யஷ்வந்த் எச்சில் விழுங்கினான். மச்சானின் மன கவலை புரிந்தது.


"சாரி சூர்யா.. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. நீ என்ன பண்ற.?"


"இன்டியா கிளம்பிட்டு இருக்கேன். உன் அப்பா அவளை உயிரோடு விட்டா நான் அவர் சொல்லும் எல்லாத்தையும் செய்றதா சொல்லி இருக்கேன்.." 


யஷ்வந்துக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்பா இந்த அளவிற்கு போவார் என்று அவன் நினைக்கவில்லை. கொலை செய்ய முயன்றவர் ப்ளாக்மெயில் செய்ய மாட்டாரா என்று தன்னையே கேட்டுக் கொண்டான். ஆனால் அவனுக்கு ஒரு விசயம் புரியவில்லை. வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்தால் மட்டும் அந்த திருமணம் நிலைத்து விடுமா என்ற சந்தேகம் இருந்தது அவனுக்கு.


"என் அப்பா ரொம்ப மோசம்ன்னு புரிஞ்சிக்கிட்டேன் சூர்யா. எனக்கு நிறைய சொல்ல தோணுது. ஆனா என்னால எதையும் யோசிக்க கூட முடியல இப்ப. தாரணி கண் விழிச்ச பிறகு போன் பண்றேன். சாரி.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான். உண்மையிலேயே அவனால் தாரணியை தாண்டி எதையும் ‌யோசிக்க முடியவில்லை.


ஆதீரன் மல்லிகை சரங்களை மனைவியின் கூந்தலில் சூடி விட்டான்.


"ரொம்ப அழகு.." என்றான்.


அவனின் புறம் திரும்பியவள் வெட்கத்தோடு அவனின் நெஞ்சில் முகம் புதைத்தாள்.


"நிஜமா இன்னும் அஞ்சி நாள் நான் தள்ளி இருக்கணுமா.?" ஏக்கமாக கேட்டவனிடம் ஆமென தலையசைத்தாள்.


"உங்க அப்பா வீட்டுக்கு போனியே, என்ன சொன்னாரு.?" தயக்கமாக கேட்டான்.


"உங்களை மன்னிக்க முடியாதுன்னு சொல்லிட்டாரு. என்னை மன்னிக்கவும் நேரம் வேணும்ன்னு கேட்டாரு.." என்றாள் கவலையாக.


ஆதீரன் அவளின் நெற்றியில் முத்தமிட்டான். அவளின் சோகத்தை மடை மாற்ற முயன்றான்.


அவனின் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவள் அவனின் புன்னகையிலும் மின்னும் கண்களிலும் தொலைந்துப் போனாள்.


"உன் லிப்ஸ் ரொம்ப கலரா இருக்கு.." என்றவன் அவளின் இதழ் நோக்கி குனிந்தான். கண்களை மூடியவள் அவனை நெருங்கினாள். இதழ்கள் இரண்டும் இணைந்த பொழுதில் தனக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தாள் சங்கவி. முகம் சுளித்தாள். தன் முன் இருந்தவனை பலமில்லாத கரங்களோடு பின்னால் தள்ளினாள்.


"சங்கவி.." அவளின் முக மாற்றம் கண்டு பயந்துப் போனான்.


மடங்கி விழுந்தாள். "சங்கவி.." பதறிப் போய் அவளின் முன் மண்டியிட்டான். 


"என்ன ஆச்சி சங்கவி.? என்ன பண்ணுதும்மா.?" 


"வயிறு வலி மாமா.." என்று பற்களை கடித்தவள் வலது கையால் அடிவயிற்றை பற்றினாள்.


"ரொம்ப வலி.." என்றவளின் கண்களில் கண்ணீர் கொட்டியது. 


பயந்து போனான் ஆதீரன். "ஹாஸ்பிட்டல் போலாம் வா.." நொடியும் தாமதிக்காமல் அவளை தூக்கினான்.


அவனின் சட்டையை இறுக்கி பிடித்தவள் "பயமா இருக்கு மாமா.." என்றாள். 


"ஒன்னும் ஆகாது சங்கவி.." தைரியம் சொன்னான். ஆனால் அவனுக்கும் பயமாகதான் இருந்தது.


மருத்துவமனை செல்லும் வழியில் பாதி தூரத்திலேயே செங்குருதி அவளின் பாதத்தை நனைத்து விட்டது. அவளின் வீறிட்ட அலறலில் திரும்பிப் பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் மூச்சே வரவில்லை. ஏதோ ஒரு தவறு என்பது புரிந்தது. நடப்பதை முழுதாய் புரிந்துக் கொள்ள முடியவில்லை. 


மருத்துவமனையில் அவளை அனுமதித்தவன் அரை மணி நேரம் காத்திருந்த பிறகு ரேகாவின் முன்னால் அமர்ந்தான்.


"என்னாச்சி.?" என இவனை பார்த்து கேட்டாள் அவள்.


"தெரியல டாக்டர்.. நீங்கதான் சொல்லணும்.." என்றவனிடம் "அபார்ஷன் ஆகியிருக்கு. என்ன ஆச்சின்னு கேட்டேன். நீங்க ஏதாவது சம்பந்தமில்லாத உணவை தந்துட்டிங்களா.?" என கேட்டாள்.


அவள் முன் சொன்ன விசயத்திலேயே உறைந்து போய் நின்று‌ விட்டவன் இடம் காலம் மறந்து போனான்.


இந்த ஐந்து நாளில்தான் எத்தனை கனவுகள்.? எவ்வளவு ஆசைகள்.? அத்தனையும் வெறும் காற்றில் பொசுங்கி போனது கண்டு மனதுக்குள் துகள் துகளாக உடைந்தான். கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது. அழ தோன்றியது. 


"மிஸ்டர்.." ரேகாவின் அழைப்பில் நிமிர்ந்தான்.


"ஏதாவது சாப்பிட தந்திங்களா.? குழந்தை கலையும் படியான உணவுகள் தந்திங்களா.? உங்களை மறந்து உங்களுக்கே தெரியாம ஏதாவது தந்துட்டிங்களா.?" எனக் கேட்டாள்.


"இல்ல டாக்டர்.‌ நீங்க தந்த டயட் சார்ட்படிதான் சாப்பாடு தரோம். அதுவும் நானேதான் பார்த்து பார்த்து சாப்பிட வச்சிட்டு இருந்தேன்.." என்றான் உடைந்த குரலில்.


"ஐ திங் மைன்ட் ப்ராப்ளமா இருக்கும்.. பிரஷர் அதிகமா இருக்கலாம்.." என்றாள்.


ஆதீரன் குழம்பிப் போனான். அவளை எந்த விதத்திலும் தான் துன்புறுத்தவோ, அவளுக்கு மன காயம் தரவோ இல்லை என்று அவனுக்கே தெளிவாக தெரிந்தது. தன்னிடம் அவள் மகிழ்ச்சியாக இருந்தால் என்பதற்கு அவனே சாட்சி. பிறகு எப்படி இப்படி ஆனது என்று தனக்குள் யோசித்து மண்டையை உடைத்துக் கொண்டான்.


"அவங்களுக்கு இப்ப பிரச்சனை எதுவும் இல்ல. ஆனா நீங்க கொஞ்சம் கேர்புல்லா பார்த்துக்கங்க.." என்று அனுப்பி வைத்தாள் ரேகா.


சங்கவி நிமிரவேயில்லை. அழுதுக் கொண்டே இருந்தாள். காருக்கு அழைத்துச் சென்று முன்னால் இருந்த இருக்கையில் அமர வைத்தவனுக்கு பின் இருக்கையை காணுகையில் கரங்கள் நடுங்கினான்.


"அழாதே சங்கவி.." வெற்று குரலில் சொன்னவன் வழியில் எதுவும் பேசவில்லை. இருவருமே மௌனமாக வந்தனர்.


வீட்டிற்குள் அழைத்து வந்து அமர வைத்தவன் போர்வையை எடுத்து வந்து அவளுக்கு போர்த்தி விட்டான்.


"தம்பி கார்ல டர்டியா இருக்கு. நான் சுத்தம் செய்யட்டுங்களா.?" என கேட்ட வேலைக்காரரிடம் "வேணாம்.." என்று அவசரமாக சொன்னவன் அவனே ஓடினான். அவனே காரை சுத்தம் செய்தான். பாதம் நனைத்து சென்ற செந்நீரில் கண்ணீரும் கலந்தது.


சங்கவி இரவு உணவை உண்ணவில்லை.


"சாப்பிடும்மா.." கெஞ்சினான் ஆதீரன்.


"எனக்கு என் குழந்தை வேணும்.." என்று அழுதவளை கண்டு மனமுடைந்தான்‌.


"சாரி சங்கவி.." என்று அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அணைத்திருந்தவளின் உச்சந்தலையில் முத்தமிட்டான். 


அழுதுக் கொண்டே இருந்தாள். அன்று இரவு ஓரம் ஒதுக்கி படுத்துக் கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் மட்டும் நிற்கவேயில்லை.


ஆதீரன் குழந்தை போனதற்கு கூட அவ்வளவு கலங்கவில்லை. இவளின் கண்ணீர் கண்டுதான் அதிகம் உடைந்துப் போனான்.


"அழாதம்மா.." கெஞ்சினான். அவனை தூர தள்ளினாள். "நான் சுத்தமா இல்ல. என் பக்கத்துல வராதிங்க.." என்றாள்.


ஆதீரனால் அவளின் வருத்ததையும் வலியையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அதனாலேயே அமைதியாக விட்டு விட்டான்.


சூர்யா இந்தியா வந்து சேர்ந்தான். மும்பையிலிருந்த மாமன் வீட்டிற்கு வந்தான். வீட்டிலிருந்த அனைவரும் அவனை அன்போடு வரவேற்றனர்.


"சூர்யா.." ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் தர்ஷினி.


அவளை விலக்கி நிறுத்தினான். எப்போதும் போல கலகப்பாக இல்லாமல் இரும்பு முகமாக இருந்தவனை குழப்பத்தோடு பார்த்தனர் அனைவரும்.


"வா.." ஒற்றை வார்த்தையில் அழைத்த மனோகர் தனது ஆபிஸ் ரூமுக்குள் அவன் வந்ததும் கதவை தாழிட்டார்.


"எதுவும் ஸ்மார்ட்டா பிளான் பண்ணாத.. பிறகு குந்தவியோட பிணம் கூட உனக்கு கிடைக்காது.." என்றவர் அவனுக்கு இருக்கையை கை காட்டினார். மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பாக வந்து அமர்ந்தான்.


"இன்னும் ஒரு வாரத்துல உனக்கும் தர்ஷினிக்கும் கல்யாணம்.. உங்களோட மொத்த பிசினஸ்லயும் யஷூ நிறுவனம் சரி பாதி பங்குதாரராக இருக்கணும்.." என்றார்.


சூர்யா சரியென தலையசைத்தான்.


"குந்தவி கடைசி வரைக்கும் உன் கை சேர மாட்டா.. அவ கண் விழிச்சதும் வீடியோ கால்ல காட்டுறேன். அத்தோடு சரி. அதுக்கு மேலே எதிர்பார்க்காதே.." என்றார்.


அதற்கும் சரியென்றே தலையசைத்தான்.


"நம்ம டீலிங் பத்தி இந்த வீட்டுல இருக்கும் யாருக்கும் தெரிய கூடாது.. சரியா.?" என கேட்டவரிடம் மொத்தமாக தலையசைத்து விட்டு வெளியே நடந்தான்.‌ அதே வேளையில் கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்தான் யஷ்வந்த். இப்போதேதான் தாரணியை மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து விட்டு வந்திருந்தான். 


"தாரணியை ஏன் கொல்ல பார்த்திங்க.?" என்றபடி முன்னால் வந்தவனை பார்த்து கையமர்த்தினார்.


"ஆடாதே.. அப்புறம் உன் பொண்டாட்டிக்கு மறுபடியும் வெட்டு விழும்.." என்றவருக்கு இந்த திட்டத்தில் தாரணி தப்பித்து விட்டது கோபத்தை‌ தந்திருந்தது.


"உங்களால என்ன செய்ய முடியும்ன்னு நானும் பார்க்கறேன்.." என்றவன் அவர் முன் இருந்த மேஜையை தூர தள்ளி விட்டான்.


மனோகர் கூலாக தன் போனை எடுத்தார். வீடியோ ஒன்றை காட்டினார்.


"உன் பிரெண்ட் மூக்கோடு இருக்கும் இந்த ஆக்சிஜன் மாஸ்கை கழட்டி விட சொல்ல எனக்கு இரண்டு செகண்ட் கூட ஆகாது.." என்றார்.


யஷ்வந்த் எரிச்சலானான். கடுப்பாக இருந்தது. கோபம் வந்தது. ஆத்திரமாக வந்தது.


"சொந்த பையன்கிட்டயும், தங்கை மகன்கிட்டயும் பேரம் பேசுறிங்க.. நீங்க நிஜமாவே மனுசன்தானா.?" ஆத்திரத்தோடு கத்தினான்.


"மனுசனா இருக்கேன். அதனாலதான் தோல்வியை வெறுக்கிறேன்.." என்றார்.


குந்தவியின் உயிரை காப்பாற்ற வேண்டுமென்றால் இவரிடம் இணங்கி போவது தவிர வேறு வழியே இல்லை என்பதை புரிந்துக் கொண்ட சூர்யா யஷ்வந்தின் கை பற்றினான். 


"விட்டுடு.." என்றான். யஷ்வந்தை அழைத்துக் கொண்டு வெளியே நடந்தான்.


ஆதீரன் அடுத்த நாள் பணிக்கு செல்லவில்லை. உடற்பயிற்சி முடித்து வந்தவன் படுக்கையறையை திறக்க முயன்றான். கதவு உள்ளே தாழிட்டப்பட்டு இருந்தது.


"சங்கவி.." அழைத்துப் பார்த்தான். அவள் கதவை திறக்கவில்லை.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments