Advertisement

Responsive Advertisement

மௌனம் 15

 முக்கிய அதிகாரிகள் பலரும் அந்த அறையில் கூடி இருந்தார்கள்‌. பல நாடுகளின் அதிகாரிகளும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைந்திருந்தார்கள்.

"தங்சேயாவை கொல்றதுதான் நமக்கான ஒரே டாஸ்க்.. இத்தனை நாளா அவன் இருந்த இடத்தை நம்மால கண்டுபிடிக்க முடியல. ஆனா இப்ப அவனே வெளியே வந்திருக்கான். அவனை பிணமா மாத்தாம விடவே கூடாது.. நம்ம எல்லா நாடுகளுக்குள்ளவும் எத்தனையோ போட்டி பொறாமைகள் இருக்கலாம். நம்ம போட்டி பொறாமைகளை நியாயமான முறையில் எல்லையில் உள்ள வீரர்களோடும், நாட்டோட நிதிவளத்தோடும், மற்ற வளங்களோடும் காட்டி சண்டை போட்டுக்கலாம்.. ஆனா பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படவே கூடாது. நம்மோட கவனம் அது ஒன்னா மட்டும்தான் இருக்கணும்.!" என்றான் ஒரு நாட்டின் அதிகாரி அவனின் மொழியில்.

"அட வெங்காயம்.. எல்லையில் உள்ள வீரர்களோடு சண்டை போட்டு, அடுத்த நாட்டு நிதிவளத்தை சுரண்டினாலும் பொதுமக்கள்தான்டா பாதிக்கப்படுவாங்க.." என்ற குமரனை சுற்றி இருந்த அனைவரும் அதிர்ச்சியோடு பார்த்தார்கள்.

"எனக்கு உங்க மொழி புரியல.. ஆங்கிலத்தில் சொல்றிங்களா.?" என தனது மொழியிலேயே கேட்டான் முன்பு பேசியவன். 

"வெங்காயங்கம்ங்கறது கெட்ட வார்த்தைதானே.?" என கேட்டார் குமரனின் அருகே அமர்ந்திருந்த ஒரு அதிகாரி.

"மரியாதை குறைவான சொல்.." என்ற குமரன் ஸ்கீரினை பார்த்தார். "நீங்க சொல்றதும் சரிதான் மிஸ்டர் தாமஸ்.." என்றார்.

"மரியாதைக்குரிய மீட்டிங் இது குமரன்.." என்றார் மற்றொரு அதிகாரி.

"அந்த மாங்கா மண்டையனுக்கு தமிழ் தெரிய போறது கிடையாது.. அதையும் மீறி தெரிஞ்சிக்கிட்டாலும் நான் பீல் பண்ண போறது இல்ல.. ஒரு நாடு மற்றொரு நாட்டோடு அன்பாவும், சமத்துவமாவும், சகோதரத்துவமுமாதான் இருக்கணும்.. அதை விட்டுட்டு பொறாமையாவும், போட்டியோடவும் இருக்க கூடாது.. இவனுக்கு நம்ம மக்கள் மேல அக்கறையெல்லாம் கிடையாது.. தங்சேயாவை அழிக்கறதுல அவனுக்கு நம்ம உதவி வேணும். அதுக்காக வந்து ஐஸ் வச்சிட்டு இருக்கான். பரஸ்பரம் உதவி செஞ்சிக்கிறதா இருந்தா அதை நேரா பேசணும்.. இப்படி சுத்தி வளைச்சி சீன் போட கூடாது.." என்ற குமரனை அங்கிருந்த அனைவரும் முறைப்பும், அதிர்ச்சியாகவும் பார்த்தனர்.

"மிஸ்டர் குமரன்.. நீங்க ரொம்ப பொறுப்புள்ள அதிகாரி.. தயவுசெஞ்சி பொறுப்போடு நடந்துக்கங்க.. இல்லன்னா இந்த ரூமை விட்டு வெளியே போங்க.. நீங்க உங்க கோபத்தையும், கடுப்பையும் காட்டுறதுக்கு இங்கே ஒன்னும் பிலிம் ஷோ நடக்கல.." என்றார் அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர்.

தங்சேயா நாட்டுக்குள் நுழைந்திருக்கிறான் என்ற செய்தி அறிந்ததில் இருந்தே குமரனுக்கு இப்படிதான் முன்கோபம் வந்துக் கொண்டிருந்தது. அவனை ஒழிக்காமல் தன்னால் நிம்மதியா இருக்க முடியாது என்று எண்ணினார் அவர்.

"சாரி சார்.." என்ற குமரன் நடந்த மீட்டிங்கை அமைதியாக பார்த்தார்.

தங்சேயாவை பிடித்து தங்களிடம் உயிரோடு ஒப்படைக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்தது ஒரு நாடு. அது நிச்சயம் முடியாது என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் தலைமை வகித்த அதிகாரி.

இன்னொரு நாட்டின் அதிகாரி தங்சேயாவை பிடிக்க தனது நாட்டில் இருக்கும் சில அதிகாரிகளை அனுப்புவதாக சொன்னார்.

"இங்கேயும் திறமையான வீரர்களும், அதிகாரிகளும் இருக்காங்க.." என்றார் தலைமை வகித்தவர்.

"ஆனா ஆறு மாசம் முன்னாடி வெறும் பாம்மா வெடிச்சது உங்க நாட்டுலதான்னு நினைக்கிறோம். அப்ப அந்த அதிகாரிகளும், வீரர்களும் ஓய்வெடுக்க போயிட்டாங்களா.?" என கேட்டார் அவர்.

"உங்களை மாதிரி சில போக்கத்த நாடுகளுக்கு எங்க நாட்டுல பிரிவினையை உண்டாக்கணும்.. அதுக்காக எங்க மக்களோட மனசுலயே விதவிதமா விஷத்தை விதைச்சி வச்சிருக்கிங்களே.. அந்த காரணத்தாலதான் எங்களால ஜெயிக்க முடியாம போச்சி.." உணர்ச்சி வசத்தில் இந்த முறை ஆங்கிலத்திலேயே கேட்டு விட்டார் குமரன்.

எதிரில் வீடியோ கான்பரஸில் இருந்தவர்களில் முக்கால்வாசி பேரின் முகம் மாறி போய் விட்டது.

"யோவ் குமரன்.. உன் வாய் மட்டும் கம்முன்னே இருக்காதா.? எதாவது இழுத்து வச்சிட்டே இருப்பியா.?" குமரனின் அருகில் அமர்ந்திருந்த தமிழ் அதிகாரி ஒருவர் கேட்டார்.

"அவன் கேட்டது மட்டும் யோக்கியமா.? அவனுங்க நாட்டுல ஒரு குண்டு கூட வெடிச்சதே இல்லையா.? இல்ல தேச துரோகம்ன்னு குற்றம் சாற்றிய ஒருத்தரை கூட அரெஸ்ட் பண்ணதே இல்லையா.? இவங்களுக்கு நம்மை இளக்காரம் பண்ணி பார்க்கணும்ன்னு ஆசை.. அதான்.!" என்று கடுகடுத்தார் குமரன்.

தலைமை தாங்கிக் கொண்டிருந்தவர் தன் முன்னால் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார். அவர் கேட்க நினைத்ததைதான் குமரன் கேட்டிருந்தார். இருந்தாலும் இது போன்ற ஒரு சமயத்தில் தனது கோபத்தை காட்டுவது சரியென்று அவருக்கு தோன்றவில்லை.

"ஓகே.. ஓகே.. இந்த சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டுட்டு இப்ப ஒற்றுமையா செயல்படலாமா.?" தென்கிழக்கு நாட்டை சேர்ந்த ஒரு அதிகாரி விசயத்தை இலகுவாக்க முயன்றார். 

குமரன் எழுந்து நின்றார்.

"தங்சேயாவை உயிரோடு எங்களால பிடிச்சி தர முடியாது‌. நாங்க வேட்டைக்காரங்க இல்ல. அடுத்து எங்ககிட்டயே தேவையான படைபலம் இருக்கு. யாரும் எங்களை சீப்பா எடைப்போட வேணாம். தங்சேயாவோட சொந்த நாட்டுக்கு பாடியை அனுப்பி வைக்கலாமா வேணாமான்னு மெதுவா யோசிச்சி நாங்களே தகவல் தரோம்.." என்றவர் தலைமை வகித்தவர் பக்கம் திரும்பினார். "இதுக்கு மேல நான் இங்கே இல்ல சார்.. நீங்களே பேசி முடிச்சிக்கங்க.." என்றுவிட்டு வெளியே நடந்தார்.

வெளியே வந்ததும் முதலில் தனசேகருக்குதான் போன் செய்தார்.

"சார்.." 

"உன்கிட்ட அப்ரூவரா வந்து சேர்ந்தவனை கொல்லுவியோ, இல்ல அவனை தட்டி கொடுத்து வேலை வாங்குவியோ எனக்கு தெரியாது. ஆனா அந்த தங்சேயா எங்கே இருக்கான்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும். இன்னும் நாலஞ்சி நாள்ல தங்சேயா செத்தே ஆகணும்.." என்றார்.

"ஓகே சார்.. கண்டிப்பா சார்.." என்றுச் சொல்லிவிட்டு போனை வைத்தான் தனசேகர்.

காலை நேரத்தில் நவீனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் ரதி. ரூபியின் கழுத்து காயத்தை பார்த்து அதிர்ந்தாள்.

நவீனாவிற்கு இன்று நாட்டிய போட்டி இருந்தது. அவளுக்கு துணையாக செல்ல இருந்தாள் ரதி. 

ரூபியை வீட்டிலேயே ஓய்வெடுக்க சொன்னான் நவீன். 'எதுவாக இருந்தாலும் உடனே போன் செய்ய வேண்டும்' என்று சொன்னவன் "நீ இங்கேயே ரூபிக்கு துணையா இருக்கியா.?" என்று ரதியிடம் கேட்டான். 

"இல்ல பாஸ்.. நான் பத்திரமா இருந்துப்பேன்.. நீங்க உங்க நாட்டியத்தை கவனிங்க.." என்றாள் ரூபி.

ரதிக்கு ரூபியை நினைத்து பரிதாபமாக இருந்தது. 

ரூபியின் தலையை வருடிவிட்டு வெளியே நடந்தான் நவீன்‌.

ரதி ரூபியை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நவீனாவின் பின்னால் நடந்தாள்.

"காரை நீ ஓட்டு.." என்றவன் முன்சீட்டில் ஏறி அமர்ந்தான். 

ரதி அவனை கடுப்பாக பார்த்தாள்.

காரை சாலையில் செலுத்தியவள் "நேத்து நீ சொன்ன போது கூட ஏதோ காமெடிக்கு சொல்றியோன்னு நினைச்சேன்.. ஆனா அந்த பொண்ணை கொலை பண்ண பார்த்திருக்க.. நான் இதுக்கு கம்ப்ளைண்ட் பண்ணின்னா உன்னை உள்ளே தள்ள முடியும். தெரியுமா.?" என்றுக் கேட்டாள்.

"நான் மைன்ட் டிஸ்டர்ப்பா இருக்கேன்.. தயவுசெய்து என்னை சீண்டாம வண்டியை ஓட்டு.." என்றான் கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தபடி.

"அந்த பொண்ணை கொல்லும் போது மைன்டே இருந்திருக்காது உனக்கு.. இப்ப சீன் போடுறியா.?" எனக் கேட்டவளின் கன்னத்தில் பளீரென விழுந்தது ஒரு அறை.

காரை நிறுத்தியவள் தன் விலாவால் அவனின் நெஞ்சில் ஒரு குத்து விட்டாள்.

"ம்மா.." நெஞ்சை பிடித்துக் கொண்டு அவளை அதிர்ச்சியோடு பார்த்தான்.

கோபம் குறையாதவள் தனது வலது கை விரல்களை மடக்கி அவனின் முகத்தை நோக்கி குத்த வந்தாள். சட்டென்று பிடித்தவன் "நான் டேன்ஸ் ஆட போறேன்.." என்றான் அதிர்ச்சியோடு.

குழப்பத்தோடு பார்த்தவள் "ஓ இந்த காளை மாட்டுக்கு முகத்துல அடி பட கூடாதோ.?" என்று நக்கலாக கேட்டாள்.

நவீன் பதில் சொல்லாமல் அவளை வெறித்தான். 

"டைம் ஆயிட்டு இருக்கு.!" என்றான்.

"அந்த பொண்ணை கொல்ல முயற்சிக்கும்போது.." அவள் மேலும் பேசும் முன் அவளின் வாயை பொத்தினான்.

"தேவையில்லாம வாயை விடாதே.! உனக்கு என்னை பத்தி எதுவும் தெரியாது.." என்றான்.

அவனின் கையை விலக்கி தள்ளியவள் "அதுதான் தெரியுமே, காளைமாடுன்னு!" என்றாள்.

"ஜஸ்ட் செட்அப்.. ஒரு மனுசனோட கஷ்டத்தை புரிஞ்சிக்க முடியலன்னா அத்தோடு விடு.. ஏன் டார்ச்சர் பண்ற.?" என்று எரிந்து விழுந்தான்.

ரதி அவனை முறைத்தபடியே காரை இயக்கினாள்.

"நல்லா நடிக்கறடா.." என்று முனகினாள்.

ரூபியை கஷ்டப்படுத்தியது அவனுக்கும் வருத்தமாக இருந்தது. தன் மீதே கோபம் கொண்டிருந்தான். வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல ரதி அதையே திருப்பி திருப்பி சொல்வது கடுப்பாக இருந்தது அவனுக்கு.

ரூபியை தாக்கியது தவறு என நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது ரதியை அடித்ததும் குற்ற உணர்ச்சியை தந்தது. 

அவள் குத்திய இடமும் வலித்தது. நெஞ்சை தேய்த்து விட்டுக் கொண்டான்.

நாட்டிய போட்டி நடைப்பெறும் இடத்தில் காரை நிறுத்தினாள் ரதி. நவீனா இறங்கினாள். அந்த கட்டிடத்தின் வாயிலில் நின்றிருந்த ஆடவர்கள் சிலர் நவீனாவை நோக்கி வந்தனர்.

"ஹலோ பாடிகார்ட்.. என்னை பத்திரமா உள்ளே கூட்டிப் போங்க.. உங்க நாட்டுக்காரங்க என்னை கண்ணாலயே ரேப் பண்ணிடுவாங்க போல.!" என்று கூந்தலை ஒருபக்கம் ஒதுக்கி விட்டாள் நவீனா.

"போதும் ராசா.. ரொம்ப ஸ்டைல் பண்ணாத.. அப்புறம் விக் பறந்துட போகுது.!" கிண்டலடித்த ரதி அங்கிருந்த ஆடவர் கூட்டத்தை கண்டு நெற்றியில் அடித்துக் கொண்டாள்.

"மானத்தை வாங்குறதுக்குன்னே இருக்கானுங்க சிலர்.." என்று முனகியபடி நவீனாவின் கைப்பற்றி அழைத்துக் கொண்டு உள்ளே நடந்தாள். 

"ரொம்ப உரசுற.." என்றவனை திரும்பிப் பார்த்து முறைத்தவள் "உன் வாயை நான் உடைக்கணுமா.?" என்றுக் கேட்டாள்.

நவீனா வேண்டாமென்று தலையசைத்துவிட்டு அவளின் பின்னால் நடந்தாள்.

"நகருங்கப்பா.. நகருங்க.." கூட்டத்தை விலக்கிக் கொண்டு நடந்தாள்.

"மேடம்.. ஒரு செல்பி.." என்று வந்தான் ஒரு இளைஞன்.

"இவங்க என்ன சினிமா செலிபிரிட்டியா.? இல்ல மினிஸ்டரா.?" என்று கேட்டு எரிந்து விழுந்த ரதி நவீனாவை அந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்றாள்.

"பொண்ணுக்கும் பையனுக்கும் கூட வித்தியாசம் தெரியாம ஏறி விழுகுறானுங்க.. ச்சை.." என்று எரிச்சலானாள்.

"ஓ.. இப்ப உன்னை அவங்க சைட் அடிக்கலன்னு சோகம். அதானே.?" என்றான் நவீன்.

"டேய் பொறுக்கி.. அமைதியா வாடா.." என்றவள் அவனை நாட்டியம் நடக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

அந்த மேடை முழுக்க வண்ண விளக்குகள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தது. அங்கிருந்த பெண் ஒருத்தி வந்து நவீனாவை அழைத்துக் கொண்டுச் சென்றாள். ரதி அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். 

நவீனாவை போலவே நாட்டியம் ஆட வந்திருந்த மற்றப் பெண்கள் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தார்கள்.

ரதி அனைவரையும் பார்த்தபடி நேரத்தை கடத்திக் கொண்டிருந்தாள். சற்று நேரம் கடந்தப் பிறகு நவீனா அங்கே வந்துச் சேர்ந்தாள். ரதி அவளைத் தலை முதல் கால் வரை பார்த்துவிட்டு தன்னை மறந்து எழுந்து நின்றாள்.

முழு அலங்காரத்தில் இருந்த நவீனா பேரழகாக இருந்தாள். 'ரதி விழுந்துடாத.. இவன் டேஞ்சர்..!' என்று தன்னையே எச்சரித்துக் கொண்டாள் ரதி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW


Post a Comment

0 Comments