Advertisement

Responsive Advertisement

மௌனம் 16

 ரதியின் அருகே வந்த நவீனா "ஏன் இப்படி என் மானத்தை வாங்கற.?" என்றுச் சிறுகுரலில் சிடுசிடுத்தான்.

ரதி புரியாமல் விழித்தாள்.

"வழியுது.. நேத்து வரை உன்னை ரொம்ப மதிச்சேன்.." என்றான் அதே கோபத்தோடு.

ரதி அவசரமாக வாயை துடைத்துக் கொண்டாள். 

"நா.. நான் உன்னைப் பார்க்கல.." என்றாள் அவசரமாக.

"ரொம்ப கேவலமா பொய் வேற பேசற.." 

'டேமேஜ் பண்றானே.!' யாராவது தங்களை கவனிக்கிறார்களா என்று கவலைப்பட்டவள் சுற்றும் முற்றும் பார்த்தாள். நல்லவேளையாக இவளை யாரும் பார்த்திருக்கவில்லை.

"நீயே என்னை காட்டி கொடுத்துடுவ போல.." 

"எது நீ காளை மாடுங்கறதையா.?" எனக் கேட்டவளை முறைத்தவன் "பாடிகார்ட்தானே.? அந்த வேலையை மட்டும் பாரு.." என்றுவிட்டு நகர்ந்தான். அவள் சொன்ன காளை மாடு எனும் வார்த்தை கெட்ட வார்த்தை போலவே அவனுக்கு தோன்றியது.

விளக்குகள் அனைத்தும் போடப்பட்டது. ஐந்தாறு ஒளிப்பதிவாளர்கள் கேமராக்களோடு அனைத்து மூலைகளிலும் நின்றிருந்தனர்.

பெண் ஒருத்தி நாட்டிய மேடை மீது வந்து நின்றாள். நடனத்தை ஆரம்பித்தாள். ஏதோ ஒரு இசை ஓடிக் கொண்டிருந்தது. ரதி நாட்டியத்தை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தாள். 

"எப்படிதான் இப்படியெல்லாம் முத்திரை காட்டுறாங்களோ.? அந்த கண்ணை சுழற்றுறது, கை காலை வளைக்கிறது, அவங்க எங்கேயோ பார்க்கறாங்க. ஆனா அவங்க மேலயே நம்ம கவனம் முழுக்க இருக்கற மாதிரி நம்மை மெஸ்மரைஸ் பண்ணி வைக்கறாங்க.. எப்படிதான் இவங்களால மட்டும் முடியுதோ.?" என்று வியப்போடு சொன்னாள்.

"உனக்கு ஆசையா இருந்தா நீயும் ஆடு. யார் வேணாம்ன்னா.?" நவீனின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்தாள். அவளின் அருகில் அமர்ந்திருந்தான் அவன். அவளின் கையில் இருந்த தனது பேக்கை வாங்கியவன் உள்ளிருந்து கண்ணாடி ஒன்றையும் லிப்ஸ்டிக் ஒன்றையும் எடுத்தான்.

உதட்டுக்கு அளவாய் சாயம் பூசியவன் "சரியா இருக்கா.?" என்றுக் கேட்டான் அவளிடம்.

ரதிக்கு வாயை திறக்க பயமாக இருந்தது. நெருக்கத்தில் கொள்ளை அழகாக இருந்தான். ஆண்மகனை ரசிப்பது கூட அவளுக்கு தவறாக தோன்றவில்லை. பெண் உருவில் இருப்பவனை இப்படி மானம் கெட்டு, அவனே கேவலமாக கிண்டலடிக்கும் அளவிற்கு ரசிக்கிறோமே என்றுதான் கவலைப்பட்டாள்.

"மேக்கப் ஓவரா இருக்கா.?" மீண்டும் அவளிடம் கேட்டான்.

'மேக்கப் ஓவராக இல்லை. அழகுதான் ஓவர் டோஸ்' என்று சொல்லிவிட சொல்லி சதி செய்தது அவளின் மனமும்.

'கடைசியில ஒரு தீவிரவாதிக்கிட்ட விழுந்திட்டியே ரதி..' என்றது மனதுக்குள்ளிருந்த ஒரு குரல்.

ரதி நாட்டியம் ஆடிக் கொண்டிருந்த பெண்ணின் பக்கம் திரும்பினாள்.

"ஓவரா எதுவும் இல்ல.." என்றவள் "நீ எப்ப டேன்ஸ் ஆட போற.?" என்றுக் கேட்டாள்.

"அடுத்தது நான்தான்.!" என்றவனும் நாட்டியத்தை கவனிக்க ஆரம்பித்தான். ஆடுபவள் தவறு செய்கிறாளா என்றுதான் கவனித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

"ஆனா இங்கே இன்னும் நிறைய பொண்ணுங்க இருக்காங்களே.! நாம இப்பதானே வந்தோம்.? வரிசைப்படி ஆட விடுறாங்களா.?" சந்தேகத்தோடு கேட்டவளிடம் இல்லையென தலையசைத்தவன் "நான் இங்கே ஸ்பெஷல்.. அதனாலதான் அடுத்ததா ஆடப் போறேன்.!" என்றான்.

"உன் செய்கை எல்லாமே போர்ஜரியும், ப்ராடுமா இருக்கு.!" என்று முனகியவள் "ஆனா இப்படி யாருமே இல்லாம ஆடுறதுக்கு எதுக்கு போட்டின்னு பேர் வைக்கணும்.?" என்றுக் கேட்டாள்.

"கேமரா இருக்கு.. அவங்க ரெக்கார்டிங் பார்த்து செலக்ட் பண்ணுவாங்க.. உங்க நாட்டுல இப்ப ஏகப்பட்ட சட்டம் போட்டு வச்சிருக்கிங்களே, யாரும் அதிகமா கூட கூடாது, எங்கேயும் பொது நிகழ்ச்சிகள் நடக்க கூடாதுன்னு.!" என்றான் கடுப்பு நிறைந்த குரலில்.

ரதிக்கு எரிச்சலாக இருந்தது. 'நேற்று உன் கும்பல் வைத்த பாம் வெடிக்காமல் இருந்திருந்தால் இன்றைக்கு புது சட்ட திட்டங்கள் வந்திருக்காது.!' என்று அவனை பார்த்து சொல்ல நினைத்தாள். ஆனால் வாயை விட்டுவிட்டு பிறகு விழித்துக் கொண்டிருக்க மனம் இல்லாததால் அமைதியாக இருந்தாள்.

அந்த பெண் ஆடி முடித்ததும் அடுத்ததாக நவீனா எழுந்து சென்றாள். 

இசை என்னவோ ஒரு மாதிரி இருந்தது ரதிக்கு. கடினமான, பரதத்திற்கு ஒத்து வராத ஓர் இசையை போல இருந்தது. ஆனால் நவீனா அந்த இசையையும் ரதி ரசிக்கும் அளவுக்கு நாட்டியம் ஆடினாள். நவீனா ஆடி ஏற்கனவே பார்த்திருக்கிறாள் ரதி. ஆனால் இது போல மிகவும் அழுத்தமான, அழகான, திட்டமிட்டப்பட்ட நாட்டியத்தை அவள் பார்க்கவில்லை. அதனால்தான் தன்னை மறந்து அவனின் ஆட்டத்திற்குள் தன்னை தொலைத்து விட்டாள். அவனின் கண்களில் மூழ்கிக் கொண்டிருந்தாள். 

நாட்டியம் முடிந்ததே அவளுக்குத் தெரியவில்லை. தன்னை மறந்து அமர்ந்திருவளின் முன்னால் சொடக்கிட்டான் நவீன்.

"வீட்டுக்கு போலாமா.?" என்றுக் கேட்டான்.

ரதி எழுந்து அவன் பின்னால் நடந்தாள்.

"நீ செத்து போய் மறுபடியும் பிறந்தா எனக்கு அத்தை மகனாவோ மாமன் மகனாவோ பிறக்கணும்.!" என்று முனகியவளை விசித்திரமாக பார்த்தவன் "ஏன்?" என்றான்.

"சும்மாதான்.!" என்றவள் காரில் ஏறினாள்.

"நான் சாகணும்ன்னு அவ்வளவு ஆசை.!" என்று முனகினான் அவன்.

அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு பாதியாக திறந்திருந்தது. ரூபியின் கழுத்து காயம் எப்படி இருக்கிறதோ என்ற கவலையோடு அவளின் அறைக்கு சென்றான் நவீன். திறந்திருந்த அறையில் அவள் இல்லை. 

அவள் அந்த வீட்டிலேயே இல்லை என்பதை சில நிமிடங்களுக்கு பிறகே ரதியும், நவீனும் புரிந்துக் கொண்டார்கள்.

ரூபிக்கு அழைக்க கைபேசியை எடுத்தான். அப்போதுதான் அந்த போனுக்கு வந்திருந்த மிஸ்டுகால்களை பார்த்தான். ரூபியின் அழைப்புகள்தான் தவறி போயிருந்தது. நாட்டியத்தில் கவனமாக இருந்ததில் இந்த போனை கவனிக்காமல் போய் விட்டான் அவன்‌.

எதற்கு போன் செய்தாளோ என யோசித்தபடியே ரூபிக்கு போன் செய்தான் நவீன். ஆனால் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.

"மறுபடியும் ஹாஸ்பிட்டல் போயிருப்பாளோ.?" என்று கவலைக் கொண்ட நவீன் வாசலை நோக்கி விரைந்தான்.

"வாவ்.. நீயும் கொஞ்சம் நல்லவன்தான் போல.! நீயே அவ கழுத்தை நெரிப்பியாம்.. அப்புறம் நீயே அவளை காணமேன்னு பதறுவியாம்.!" என்று கிண்டல் செய்தாள் ரதி.

பாய்ந்து வந்து அவளின் கழுத்தை பற்றினான் நவீன். சட்டென்று அவன் கையை வளைத்து அவனின் முதுகு பக்கம் கையை கொண்டு வந்து முறுக்கியவள் "மத்தவங்க கழுத்தை நெரிக்கிறது என்ன உன் அடையாளமா.?" என்றுக் கேட்டாள்.

நவீன் திருப்பித் தாக்க முயன்றான். ஆனால் அவனின் பின்னங்கழுத்தில் ஒரு அடியை தந்து அமைதியாக நிறுத்தினாள் ரதி.

"சீரியஸா சொல்லணும்ன்னா உன்னை மாதிரி ஒருத்தனை உயிரோடு நான் விடுவதே பெரிய விசயம்.! ரொம்ப வாலாட்டாதே.! நறுக்கிடுவேன்.!" என்றாள் அமைதிக் குரலில்.

"பாடிகார்ட்ன்னு சொன்ன.. கடைசியில நீயே என்னை கொன்னுடுவ போல.!" என்றவனை கண்டுச் சிரித்தவள் "டேய் யோக்கியம்.. நீ என்னைத் தாக்க டிரை பண்ணாலும் நான் உனக்கு விசுவாசமா இருக்கணுமா.?" என்றுக் கேட்டாள்.

"அதுவும் இல்லாம இது மூலமா நீ என்னை புரிஞ்சிக்கலாம். நானும் ஸ்ட்ராங். உனக்கு உண்மையிலேயே எப்போதாவது ஆபத்து வந்தா நான் இதே போல உன்னையும் உன் எதிரிக்கிட்ட இருந்து காப்பாத்துவேன்.. நீ என்னை நம்பலாம்.!" என்றாள்.

"நான் நம்புறேன்ம்மா.! இப்ப கொஞ்சம் விடுறியா.. ரூபி காணம்.. நான் அவளை தேடி கூட்டி வரணும்.!" என்றான்.

ரதி யோசித்துவிட்டு அவனைத் தன் பிடியிலிருந்து விடுவித்தாள்.

நவீன் தன் கையை உதறிக் கொண்டான். உண்மையிலேயே வலித்தது. ஆனால் ரூபியின் அளவுக்கு இவள் பலம் கிடையாது என்றும் அவனுக்கு புரிந்தது. பலமுறை அவன் ரூபியோடு பயிற்சி சண்டை செய்துள்ளான். ரூபியின் பிடி உடும்பு பிடியாக இருக்கும். அவள் நினைத்திருந்தால் நேற்று தன்னைத் திருப்பித் தாக்க முயன்றிருக்கலாம் என்று நினைத்தவன், ரூபியின் பலத்தையே தாக்குபிடித்த தான் இந்த ரதியிடம் தோற்க வேண்டிய அவசியம் வந்தது எதனால் என்ற கேள்விக்கான பதிலை தேடவே இல்லை. 

"அவ எங்கேயாவது ஷாப்பிங் போயிருப்பா.." என்ற ரதியிடம் "அவளை இங்கேயே இருக்க சொன்னேன்.. அவ ஷாப்பிங் போயிருக்க மாட்டா.. அந்த தெருமுனை டாக்டர்கிட்டதான் போயிருப்பா.. நான் போய் கூட்டி வரேன்‌. நீ இங்கேயே இரு.!" என்றான் நவீன்.

"நானும் வரேன்.!" என்றவள் அவனின் பின்னால் ஓட முயன்ற நேரத்தில் அந்த வீட்டிற்குள் வந்தனர் விஷாலும் லாவண்யாவும்.

"ரூபி எங்கே.?" என்றுக் கேட்டான் விஷால்.

"ஆனா நீங்க ஏன் சார் கேட்கறிங்க.?" நவீனா கேட்டது கண்டு கடுப்பானான் அவன்.

"அவ போன் பண்ணா.. ஆனா வழியில எங்க கார் பஞ்சர். லேட்டா வந்துட்டமோன்னு யோசனையில் இருக்கேன் நான்.." என்றவனை குழப்பமாக பார்த்த நவீனா "அவ ஏன் உங்களுக்கு போன் பண்ணா.?" என்றுக் கேட்டாள்.

"யாரோ அவளை கடத்த டிரை பண்றதா சொன்னா.. சிக்னல் இல்லாததால அவ அதுக்கப்புறம் சொன்னது சரியா விளங்கல எனக்கு.." என்றான் விஷால்.

"கடத்த டிரை பண்ணாங்களா.?" எனக் கேட்ட நவீனுக்கு தலையை பிடித்துக் கொண்டு அமர வேண்டும் போல இருந்தது.

அந்த இருட்டறையில் கை கால் கட்டப்பட்ட நிலையில் இருந்த ரூபி தன் முன் இருந்த தங்சேயாவை பயத்தோடு பார்த்தாள்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments