Advertisement

Responsive Advertisement

மௌனம் 5

 ரதிக்கு காலையில் எழும்போதே அண்ணியின் வசவுப் பாடல்களோடுதான் நாள் விடிந்தது‌.

"வீடா இது.?" என்று அண்ணியை திட்டினான் அண்ணன்.

"நானும் மனுசிதானே.? வீட்டுல எத்தனை வேலைகளை செய்றது.? இந்த டைம்ல தூங்கறதுக்கு பதிலா எழுந்து வந்து எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாம் இல்ல‌.?" என்று ரதியின் அண்ணனிடம் முகத்தை காட்டினாள் அண்ணி.

அண்ணன் ஆரம்பத்திலேயே வேலைக்காரி ஏற்பாடு செய்துக் கொள்ள சொன்னான். ஆனால் அண்ணிக்கு பணம் கரையவே கூடாது. 

ரதிக்கும் காலையிலேயே எழுந்து வேலைகளை செய்ய வேண்டும் என்று ஆசைதான். ஆனால் எங்கே.?

குளித்து முடித்து தனது பேக்கோடு வெளியே வந்தாள்.

அண்ணி அவளை கண்களால் எரித்தாள். 

"சாப்பிடலையா பாப்பா.?" இவள் கதவருகே சென்று காலணி அணிவதைக் கண்டுக் கேட்டான் அண்ணன்.

"இல்லண்ணா.. பசிக்கல.." என்றவளுக்கு உண்மையில் பசித்தது. அண்ணி கோபத்தில் இருக்கிறாள். இப்போது சாப்பிட்டால் அண்ணிக்கு கோபம்தான் அதிகமாகும். செல்லும் வழியில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வெளியே சென்றாள்.

ஜீன்ஸ் அணியவே பிடிக்காது அவளுக்கு. அடிக்கும் வெயிலுக்கு கசகசவென்று இருக்கிறதென்றே தவிர்ப்பாள். ஆனால் இன்று துப்பாக்கியை மறைக்க இடம் இல்லாமல் ஜீன்ஸை அணிந்துக் கொண்டாள். முட்டிக்காலை தாண்டி இருந்த டாப்பிற்கு துப்பட்டா அணிய விருப்பம் இல்லை. 

ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள். "அவங்க ஏதோ ஓர் அடியாட்கள் ரதி. இல்லன்னா லாவண்யா உன்னை அனுப்ப மாட்டா.. உன்னால அவங்களை சமாளிக்க முடியும்.. ஒரு டெரரிஸ்டை விடவா நீ பலம் குறைஞ்சவ.? யூ ஆர் குயின்.." என்றுத் தனக்குதானே தைரியம் சொல்லிக் கொண்டாள்.

விஷால் தனக்கு வந்த தகவல்களை கவனமாக படித்துக் கொண்டிருந்தான்.

லாவண்யா காப்பியோடு அவன் அருகே வந்தாள். அவனருகே காலியாக இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள்.

"லாவண்யா.. இந்த பிக்சர்ல இருக்கறவனை நீ பார்த்திருக்கியா.?" என்று கணினி திரையை கை காட்டினான்.

லாவண்யா பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினாள். 

"இவன் ஸ்டெலாஸ்டியன். *** நாட்டுல நாற்பது நாள் தொடர் குண்டு வெடிப்பு நடந்ததுக்கு இவன்தான் காரணம்.! இவன் நம்ம நாட்டுலதான் இருக்கான்னு கன்பார்மா சொல்லி இருக்காங்க.. ஆனா நம்மோட எந்த சர்வர்லயும் புது ஆளோட வருகை பதிவாகல.!" என்று கவலையோடு சொன்னான் விஷால்.

"கண்டுபிடிக்கலாம் சார். அனைத்து போலிஸ்க்கும் போட்டோவை அனுப்பி வைங்க.." 

விஷால் மறுப்பாக தலையசைத்தான்.

"போன முறை நம்ம நாட்டுல நஷ்டம் உண்டானபோதே விசயத்தை நாங்க புரிஞ்சிக்கிட்டோம்.. இங்கே தோற்க காரணம் தொண்ணூறு பேரோட வீரம் இல்ல.. ஒற்றை ஆளோட துரோகம்தான்.! ஒவ்வொருத்தரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வேலையை ஒப்படைக்க வேண்டிய பொறுப்புல இருக்கோம்.!" என்றான்.

"ஒருத்தரை கூட சாதாரணமா நினைக்க கூடாது லாவண்யா.." என்றவனிடம் சரியென்று தலையசைத்தாள்.

அந்த வீட்டின் முன்னால் ரதி ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு இறக்கினாள். "உன்னால முடியும் ரதி.." என்றபடி நடந்தாள். அவள் கதவை திறக்க இருந்த நேரத்தில் ரூபியே கதவை திறந்தாள்.

"ஹாய் பேபி.." என்று இவளை அணைத்துக் கொண்டாள்.

துப்பாக்கியை கண்டுபிடித்து விடுவாளோ என்று பயமாக இருந்தது. ஏனோ இது சொதப்பலான திட்டம் போல தோன்றியது. 

ரூபி அதே புன்னகையோடு விலகி நின்றாள்.

"கம் இன்.." என்றாள். நவீனா.. நவீன் பெண் வேடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தான். ரதிக்கு ஆத்திரமாக வந்தது. அவனை சுட்டு விட சொல்லி கரங்கள் துடித்தது.

நவீனா திரும்பிப் பார்த்தாள். ரதியை வெறித்தாள். 

"நாங்க இன்னைக்கு ஷாப்பிங் போகலாம்ன்னு இருக்கோம்.. கூட்டி போறியா.?" என்றுக் கேட்டாள் ரூபி.

மொத்தமாக தலையசைத்த ரதி நவீனாவை வெறிப்பதை நிறுத்தவேயில்லை. 

ரூபி ரதியை கவனிப்பதை கண்ட நவீனா இரும்பியபடியே எழுந்து நின்றாள்.

"என் பேட்டி எப்போ ரிலீஸ் ஆகும்.?" என்றுக் கேட்டாள். 

நவீனா எழுந்த கணமே தனது பார்வையை திருப்பிக் கொண்ட ரதி "அடுத்த வாரம்.." என்றாள்.

"கிரேட்.." என்றவள் கூந்தலை ஒரு அசைத்து அசைத்தபடி தனது அறை நோக்கி நடந்தாள்‌.

அலமாரியில் இருந்த பேக்கை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு கண்ணாடியை பார்த்தான் நவீன்.

"அவளுக்கு அடையாளம் தெரிஞ்சிருக்கு. அதனாலதான் வெறிச்சி பார்க்கறா.." என்று முணுமுணுத்தான்.

'உன் பார்வையை சரி பண்ணு ரதி.. இல்லன்னா நீயே மாட்டிப்ப.!' நவீனா அறைக்கு சென்ற பிறகு தன்னைதானே திட்டிக் கொண்டாள் ரதி.

நவீனா வந்த பிறகு மூன்று பேரும் சேர்ந்து ஷாப்பிங் கிளம்பினார்கள். 

அந்த பெரிய மாலுக்குள் நுழையும்போதே ரதிக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது. ஆறு மாதங்கள் முன்னால் நடந்த எதுவும் மறந்துப் போய் விடவில்லை. இந்த நவீனும், ரூபியும் கையோடு வெடிகுண்டு கொண்டு வந்திருந்தால் என்ன செய்வது என்று யோசித்து பயந்தாள். ஆனால் நல்லவேளையாக மாலின் வாயிலிலேயே அவர்களை நிறுத்தி சோதனை செய்தனர் காவலர்கள் சிலர். ரதிக்கு இப்போது புது பயம் வந்து சேர்ந்தது. தன் இடுப்பில் இருக்கும் துப்பாக்கியை யாராவது கவனித்து விட்டால் என்ன செய்வது என்று பயந்தாள். ஆனால் அவளை சோதித்த காவலர் மென் புன்னகையோடு அவளை பட்டும் படாமல் சோதித்து விட்டு உள்ளே அனுப்பி வைத்தார்.

'தேங்க்ஸ் லாவண்யா..' மனதுக்குள் சொல்லிக் கொண்டு ரூபியை பின்தொடர்ந்தாள்.

முதலில் காஸ்மெடிக்ஸ் விற்றுக் கொண்டிருந்த கடைக்குள் நுழைந்தார்கள். ரூபி தேடி தேடி பொருட்களை எடுத்தாள். ரதி நவீனாவையே நோட்டம் விட்டபடி ஓரமாக நின்றுக் கொண்டிருந்தாள். 

'பிராடு.. உனக்கு என்னடா இந்த கடையில வேலை.? மை வாங்கி உதட்டுல பூசி, லிப்ஸ்டிக் வாங்கி கண்ணுக்கு பூசிக்க போறியா.?' என்று மனதுக்குள் கடுகடுத்தாள்.

நவீனா அந்த அங்காடியை இரண்டு சுற்று சுற்றி வந்தாள். ஏதோ ஓர் பெர்ப்யூமையும், பவுண்டேசன் ஒன்றையும் மட்டும் எடுத்துக் கொண்டு வந்தாள்.

"உங்களுக்கு எதுவும் வாங்கலையா மிஸ்.?" என்றுக் கேட்டாள் ரதியிடம்.

ரதிக்கு கோபத்தில் ரத்தம் சூடேறியது. "இங்கே நீங்கதான் ஷாப்பிங் வந்திருக்கிங்க நவீன்.. எனக்கு தேவை இல்ல.." என்றாள் புன்னகை மாறாத குரலில்.

"நவீனா.." கடித்த பற்களின் இடையே சிறு குரலில் அவளுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னாள் நவீனா.

"ஆமா.. நவீனா.." அவளும் அவனைப் போலவே பற்களை கடித்தபடி சொன்னாள். 

இருவரின் கண்களிலும் இருந்து புறப்பட்ட கதிர் எதிரெதிரே தாக்கி நின்றது.

குத்துவோமா, வெட்டுவோமா என்ற கோபத்தோடு பார்த்துக் கொண்டே விலகி நின்றனர் இருவரும்.

ரூபி பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு வந்தாள். கடையில் இருந்த முழுவதையும் அள்ளி விட்டாளோ என்று தோன்றியது ரதிக்கு.

பில்லை கட்டிவிட்டு வெளியே நடந்தனர். 

காஸ்மெடிக்ஸ் அடங்கிய பேக்கை ரூபி தூக்கி வருவதைக் கண்டு அதை வாங்கி ரதியிடம் தந்தாள் நவீனா.

"மிஸ் ரதி நமக்கு உதவி செய்யதானே வந்திருக்காங்க.. அவங்க தூக்கிப்பாங்க ரூபி.!" என்றான் நளினம் ததும்பும் குரலில்.

அடுத்ததாக துணி கடை ஒன்றிற்குள் நுழைந்தார்கள். ரூபி பட்டு புடவைகள் சிலவற்றை தேர்ந்தெடுத்தாள். நவீனாவின் தோளில் போட்டுவிட்டு ரதியின் பக்கம் திருப்பினாள்.

"இந்த புடவை இவளுக்கு மேட்ச் ஆகுதா.?" என்றுக் கேட்டாள்.

ரதி நவீனாவின் முகத்தை.. நவீனாவின் கண்களை வெறித்தாள். கரும் விழிகள். நீண்ட விழிகள். அகன்ட பேரண்டத்தில் கர்ஜித்துக் கொண்டிருக்கும் இரட்டை சூரியனை நினைவுப்படுத்தியது அவனின் கண்மணிகள். அழகாய் தவழ்ந்துக் கொண்டிருந்த அந்த சூரியன்கள் கொதித்துக் கொண்டிருக்காமல் ஜில்லிட்டு இருப்பது போலிருந்தது அவளுக்கு. எத்தனை நிமிடங்கள் பார்த்தால் என்றே தெரியவில்லை. அவளின் பார்வை நவீனாவுக்குமே சிறு சங்கடத்தை ஏற்படுத்தி விட்டது எனலாம். விழிகள் பிடித்திருப்பதாக அன்று சொன்னது ஏதோ ஒரு வார்த்தை என்றுதான் நினைத்திருந்தான். ஆனால் இப்போதுதான் அவள் சொன்னது மனதிலிருந்து என்பது புரிந்தது. தன் கண்கள் அவ்வளவு அழகாகவா இருக்கின்றன என்று குழம்பியவன் அவளுக்கு பின்னால் இருந்த நிலை கண்ணாடியில் தன் விழிகளை பார்த்தான். அங்கே அவனின் கண்களை விட அந்த கண்களில் தெரிந்த அவளின் பிரதிபிம்பம்தான் அவனின் பார்வைக்கு தெளிவாக தெரிந்தது. 

அவளின் முகம்.. வான் மேகங்களை சேர்த்து வைத்து வடித்த மென் சிலை போன்ற ஒரு முகம். அவளின் கூரான மூக்கில் இருந்த ஒற்றைக் கல் மூக்குத்தி அந்த பிரதிபிம்பத்திலும் கூட மின்னுவது போலவே இருந்தது. அவளின் காதோரம் அசைந்த கூந்தலில் மனதை தொலைத்து, மெள்ள தடுமாறி நகர்க்கையில் அவளின் இதழில் விழுந்து, தயங்கி எழுந்து நடக்கையில் அந்த விழிகளில் மொத்தமாக எரிந்து சாம்பலாகி போனான் என்றே சொல்லலாம். 'ஆழ பார்வை பார்க்கும் தீர்க்கமான கண்கள்..' அவனின் மனதுக்குள் தானாக ஒலித்தது குரல்.

"எக்ஸ்க்யூஸ்மி.." ரூபியின் குரலில் பார்வையை திருப்பினாள் ரதி. 

"நல்லா இருக்கு.." என்றாள் விழிகளை அசைக்காமல்.

கண்ணாடியிலிருந்த நவீனாவின் பார்வை இப்போது ரதியின் முகத்திற்கே திரும்பி வந்தது. 

அவனை தாண்டிப் பார்த்துக் கொண்டிருந்தவள் தலையசைத்து விரல்களில் சூப்பர் என்று முத்திரை காட்டினாள்.

அவளின் முகத்தில் இருந்த ஒவ்வொரு தசைகளும், அவளின் இதழ்களில் இருந்த ஒவ்வொரு வரிகளும் அவனை கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தன.

"காதல் பூக்கும் தருணத்தை அறிவார் யாருமில்லை. அதேபோல் அந்த காதலை அழிக்கும் வழியை அறிந்தாரும் யாருமில்லை.." என்று எங்கோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தான். கடை சிறுவன் ஒருவன் வைத்திருந்த போனில் ஓடிக் கொண்டிருந்த எப்.எம்மில்தான் இதை யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். 

நவீனாவின் பார்வை ரதியை விட்டு மீளவில்லை. ஆனால் ரதிதான் அதன் பிறகு அவன் பக்கம் திரும்பவில்லை. நான்கு புடவைகளை தேர்ந்தெடுத்தாள் ரூபி. கடையை விட்டு வெளியே வந்ததும் அந்த பைகளையும் வாங்கி ரதியிடமே தந்தாள் நவீனா.

"தூக்கிக்கோங்க பாடிகார்ட்.." என்றாள்.

ரதி கடுப்போடு அதையும் வாங்கிக் கொண்டாள். 

இன்னும் நான்கு கடைகள் ஏறி இறங்கினார்கள். அனைத்து பாரமும் ரதியின் கைகளில்தான் வந்து சேர்ந்தது.

ரதிக்கு அவனின் தலையை கோடாரியால் பிளக்க வேண்டும் போல கடுப்பானது.

கடைசியாக உள்ளாடை கடை ஒன்றிற்குள் நுழைந்தார்கள். நவீனாவை அடிக் கண்களால் வெறித்தாள் ரதி. 'வெட்கம் மானம் இல்லாதவன்..' என்று மனதுக்குள் திட்டித் தீர்த்தாள். அங்கேயும் ரூபிதான் அளவு சரிபார்த்து வாங்கினாள். அவனோ இவளை வெறித்தபடியே நின்றிருந்தான்.

ஷாப்பிங்கை முடித்த பிறகு காபி ஷாப்பிற்குள் நுழைந்தாள் ரூபி. ரதி வழியே இல்லாமல் உள்ளே சென்றாள். 

"கோல்ட் காபி ஒன்னு. கேப்பசின்னோ ஒன்னு.." என்ற ரூபி ரதியை பார்த்தாள். "கொதிக்க கொதிக்க ஒரு பில்டர் காப்பி கிடைக்குமா.?" என்றாள் ரதி.

"கிடைக்கும் மேடம்.." என்றான் சர்வர்.

"அதே கொண்டு வாங்க.." என்றவளை விசித்திரமாக பார்த்தாள் நவீனா.

சர்வர் அந்த பக்கம் சென்ற பிறகு ரதியை பார்த்த ரூபி "காப்பின்னு சொல்லியிருந்தா போதுமே.!" என்றாள்.

"இல்ல.. இங்கே அவ்வளவு சூடே இருக்காது.." என்றுச் சொன்னவள் காப்பி வந்ததும் ஒரே விழுங்கில் குடித்து முடித்தாள். அவள் குடித்ததை கண்டு நவீனாவின் கையிலிருந்த கோல்ட் காப்பி கூட சூடாகியது போலவே இருந்தது.

'என்ன நடக்குது இங்கே.? இவளோட முக மாற்றம் என் நெஞ்சை ஏன் பாதிக்குது.?' குழப்பமாக யோசித்தான் நவீன்.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


Post a Comment

0 Comments