Advertisement

Responsive Advertisement

மௌனம் 19

 ⚠️ Harmful content

இருள் சூழ்ந்திருந்த அறையில் விளக்கை ஒளிர விட்டுவிட்டு ரூபியின் அருகே வந்தார் தங்சேயா.

ரூபி தங்சேயாவை பயத்தோடுப் பார்த்தாள். அவளின் வாயோடு ஒட்டி இருந்த டேப்பை பிரித்தார் அவர்.

"என்னை விட்டுடுங்க தங்சேயா.." என்றாள் கெஞ்சலாக.

"உன்னை விடுறதுக்காகவா இத்தனை வருசமா டிரெயினிங் தந்து வச்சிருக்கேன்.?" எனக் கேட்ட தங்சேயா அவளின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்தார்.

"நான் ஒவ்வொருத்தரையும் பார்த்து பார்த்து வளர்த்தினேன். ஆனா ஏன் எல்லோரும் எனக்கு துரோகம் செய்றிங்க.? நான் உன்னை என் பொண்ணு போல பார்த்தேன் தெரியுமா.?" என்றார் அவளின் தலையை வருடியபடி.

ரூபிக்கு பயத்தில் உடம்பு மொத்தமும் நடுங்கியது. அவர் தீண்டியதும் கூட நெருப்பு மழை பொழிந்தது போலதான் இருந்தது. 

"நான் எந்த தப்பும் பண்ணல தங்சேயா.." என்றவளுக்கு கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

"ஸ்டெல்லா செத்துட்டான்னு எனக்கு நியூஸ் வந்துடுச்சி ரூபி.. உன்னை தவிர வேற யாருக்கும் அவன் இருந்த இடம் தெரியாது. நவீனுக்கும் கூட தெரியாது. அவனை கொன்னது நீதான்.!" என்றவரிடம் மறுத்து தலையசைத்தவள் "சத்தியமா நான் இல்ல.. நான் அவனை ஒரு ஹோட்டல்ல பார்த்து பேசினேன். அவ்வளவுதான்.. அப்புறம் நான் அவனை எப்பவுமே பார்க்கல.!" என்றாள். 

"இதை நான் நம்பணுமா.?" எனக் கேட்டவர் கிண்டலாக சிரித்தபடியே தன் அருகே இருந்த மேஜையை பார்த்தார். கத்தி ஒன்றை எடுத்தார்.

"நான் உனக்கு சரியான பாடம் கத்து தரேன் ரூபி.." என்றார்.

ரூபி பயத்தில் தலையசைத்தாள். 

"ப்ளீஸ்.." என்றாள் கெஞ்சலாக.

"நான் அவனை கொல்லல.." அவள் முடிக்கும் முன் அவளின் பாதத்தை கீறியது அந்த கத்தி.

பல வருட பயிற்சியின் காரணமாக வலிக்கவில்லை. ஆனாலும் பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

"நான் ஸ்டெல்லாவுக்குன்னு நிறைய வேலை தந்திருந்தேன்.. உன்னால அந்த வேலையெல்லாம் நின்னுப் போச்சி.. உனக்கு எப்படிப்பட்ட தண்டனை தந்தாலும் எனக்கு கோபமே அடங்காது ரூபி.." என்றார் அவர்.

அவளின் மறு பாதத்திலும் ஐந்தாறு கீறல்கள் விழுந்தது. இந்த முறை அவளின் பலமெல்லாம் தீர்ந்துப் போய் விட்டது. வலியில் "அம்மா.." என்றுக் கத்தினாள். கால்களின் கீழே ரத்தம் குளம் கட்டியது. இரண்டு பாதங்களில் இருந்தும் ரத்தம் கொட்டியது.

"அம்மா.? உனக்கு யாரும் கிடையாது ரூபி.. நீ அனாதை.. உன்னை உன் பெத்தவங்க சின்ன வயசுல கை விட்டுட்டாங்க.. உன் ஃபேமிலி நான்தான்.! நீ அனாதை ஆன மாதிரி இந்த உலகத்துல நிறைய குழந்தைங்க அனாதையா இருக்காங்க.. இனி இப்படி யாரும் அனாதையாக கூடாது.. இந்த சிவிலிசேசனை அழிச்சிட்டா இங்கே அனாதைகளே யாரும் இருக்க மாட்டாங்க.. நீயும் நானும் இந்த உலகத்தை மாத்தி அமைக்க பிறந்தவங்க.! இப்படி நம்ம கூட இருப்பவங்களையே கொல்லுறது சரி கிடையாது.!" என்றார்.

ரூபிக்கு கண்ணீர் மட்டும்தான் வந்தது. அவளுக்கு தன் குடும்பத்தை நினைவிருந்தது. 

"உன் கையை கொடு.." என்றவர் அவளின் கட்டப்பட்ட கையை இழுத்தார்.

"வேணாம்.. ப்ளீஸ்.." என்றாள்.

"சில நேரங்களில் தண்டனைகள் கத்து தர பாடத்தை கடவுளாலும் கூட கத்துத் தர முடியாது.." என்றவர் அவளின் உள்ளங்கையில் கோடுப் போட்டார்.

அவளால் தன் கரத்தை பின்னால் இழுக்க முடிவில்லை. கட்டுகளில் இருந்தும் தப்பிக்க முடியவில்லை.

"உன் ரத்தம் ஸ்டெல்லாவோட ஆன்மாவுக்கு அமைதியை தரட்டும்.." என்றவர் அவளின் மறுகையை எடுத்தார். ஆனால் அதற்குள் ரூபி மயங்கி சரிந்து விட்டாள். அளவுக்கு அதிகமாகவே ரத்தம் வெளியேறிவிட்டது. ஆனாலும் அவர் விடவில்லை. அந்த கரத்தையும் சேர்த்து காயம் செய்தார். 

சின்னையனிடம் வெகுநேரமாக போராடிக் கொண்டிருந்தார்கள் நவீனும், விஷாலும்.

"எனக்கு எந்த தங்சேயாவையும் தெரியாது.." என்றவனை கொன்று விட முயன்றான் விஷால்‌.

"பாஸ் நமக்கு தேவை இப்ப அட்ரஸ்.." என்று லாவண்யா நினைவுப்படுத்தி அவனை அமைதிக் காக்க வைத்தாள்.

நவீனுக்கு உள்ளம் என்னவோ போல இருந்தது. இதுவரை அவன் அனுபவிக்காத ஒரு உணர்வு அவனை பிடித்து ஆட்டியது. ஏதோ ஒன்றை இழப்பது போலிருந்தது.

தன் குழுவில் இருந்த மற்ற நண்பர்களுக்கு அழைத்து தங்சேயா பற்றிய விவரங்களை கேட்டான். தங்சேயா இவன் இருக்கும் ஊரில் இருப்பதாக மட்டும்தான் அவர்கள் சொன்னார்கள். சரியான முகவரி அவர்களுக்கும் தெரியவில்லை.

"நான் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா.? நீ இதுக்காக ரொம்ப வருத்தப்பட போற விஷால்.." என்று மிரட்டிய சின்னையனின் காலில் உதைத்தான் விஷால்.

"ஒரு பயங்கரமான தீவிரவாதி நாட்டுக்குள்ள வந்திருக்கான். அவனை அழிக்க என் டிபார்ட்மெண்ட்ல ஒரு நூறு பேரோட உயிரை பலி தர கூட யாரும் தயங்க மாட்டாங்க.. அப்படி இருக்கையில் உன் பிசினெஸ் உன்னை காப்பாத்தும்ன்னு நினைக்கிறாயா முட்டாள்.?" எனக் கேட்டவன் "லா.. நம்ம சார் போனை எடுத்தாரா இல்லையா.?" என்றுக் லாவண்யாவை பார்த்துக் கேட்டான்.

"இன்னும் இல்ல சார்.. பிசி பிசின்னே வருது.." கவலையோடு சொன்னவள் போனை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு "இவனை கொன்னுடலாம் சார்.. நான் வேணா பழியை ஏத்துக்கறேன்.. என்னோட பர்ஸ்ட் என்கவுண்டரா இருந்துட்டு போகட்டும்.." என்றாள். 

"இவனை கொல்ல எனக்கும் அஞ்சி செகண்ட் கூட ஆகாது லா.. அந்த பொண்ணு எங்கே இருக்கான்னு தெரியணும்.. எனக்கு என்னவோ தப்பு முழுக்க என் மேலதானோன்னு தோணுது. அவளை அரெஸ்ட் பண்ண நான் அவளை ஜெயில்ல போட்டிருக்கணும்.. வெளியே விடவும்தான் அவளுக்கே ஆபத்தா போயிடுச்சி.!" என்றான்.

"இவனோட மொத்த குடும்பத்தையும் அரெஸ்ட் பண்ணுங்க சார்.. ஒருத்தரை கூட விடாம எல்லோரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போடுங்க.. அப்போது இவன் உண்மையை சொல்லிதானே ஆகணும்.? இவனோட சொத்துக்கள் எல்லாத்தையும் பறிமுதல் பண்ணிடலாம்.. அப்பமும் எப்படி இவன் பிசினெஸ்மேன் ஆவான்.?" என்றுக் கேட்டாள் ரதி.

சின்னையன் சிரித்தான்.

"என்னை அழிக்கறது அவ்வளவு சுலபம்ன்னு நினைக்கிறிங்களா.?" என்றுக் கேட்டான்.

"அதையும்தான் பார்க்கலாமே.!" என்ற லாவண்யாவுக்கு அவனின் சவாலை ஏற்றுக் கொள்ள வேண்டும் போல இருந்தது.

போனை எடுத்துக் கொண்டு மீண்டும் விலகி வந்தாள். இந்த முறை தனசேகரை விடுத்து குமரனுக்கு அழைத்தாள். நடந்த, நடந்துக் கொண்டிருக்கும் விசயங்களை சுருக்கமாக சொன்னாள்.

"அந்த நாயை கொன்னுடுங்க லாவண்யா.. எவன் கேள்வி கேட்டாலும் நான் பதில் சொல்லிக்கிறேன்.." என்று கடுப்பானார் அவர்.

"அந்த தங்சேயா எங்கே இருக்கான்னு தெரிஞ்சிக்காம நாம இவனை எதுவும் பண்ண கூடாது சார்.. இவனோட சொத்துக்களை முடக்க நீங்கதான் வழி பண்ணனும்.!" என்றாள்.

"ஓகே லாவண்யா. நான் முடிச்சிட்டு கூப்பிடுறேன்.. தங்சேயாவை கொல்லணும்ன்னுதான் எனக்கும் ஆசையே.! அங்கே வர டிரை பண்றேன்.. அதுக்குள்ள உங்ககிட்ட அவன் மாட்டிட்டாலும் அவனை உடனே கொன்னுடுங்க.. எப்படிப்பட்ட காரணமா இருந்தாலும் அவனை அரெஸ்ட் பண்றதோ உயிரோடு வச்சிருப்பதோ கூடாது.. நம்மோட ஒரே குறி அவனோட மரணமாதான் இருக்கணும்.." என்றவர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டார்.

நவீனின் வீட்டிலிருந்து புறப்பட்ட தங்சேயாவின் கார் எந்த சாலையையெல்லாம் கடந்துச் சென்றது என்று விவரங்களை சேகரித்து வைத்துவிட்டு விஷாலுக்கு போன் செய்தான் ராகவ்.

"கடற்கரை சாலையை தாண்டி போயிருக்கு சார்.. ஆனா அதுக்கப்புறம் எங்கே போனாங்களோ தெரியல.." என்றான் ராகவ்.

விசயத்தை விஷால் சொன்னதும் "அவர் கடலை பார்த்தமாதிரி ஒரு வீட்டுலயோ இல்ல இடத்திலேயோதான் இருப்பாரு.. ஏனா அவருக்கு கடலை பார்த்துட்டே இருக்கணும்.!" என்று சொன்னான் நவீன்.

சின்னையனின் புறம் திரும்பிய லாவண்யா "தேச துரோக வழக்குல உங்களை அரெஸ்ட் பண்றோம்.. வாரண்ட் கேட்காதிங்க.. நாங்க உங்களை சட்டத்திடம் சொல்லாமல் அரெஸ்ட் பண்றோம்.. நீங்க நிச்சயமா இந்த வீட்டுக்கு உயிரோடு திரும்பவே முடியாது.." என்றபடியே அவனைக் கைது செய்தாள்.

"என்னோட பினாமி பேர்ல இருக்கும் கடற்கரை பங்களாவுலதான் தங்சேயா இருக்காரு.." அவசரமாக சொன்னான் சின்னையன். அவனுக்கு இவர்களின் செயல் சற்று பயத்தை தந்து விட்டது.

"எந்த பங்களா.?"

"சர்வேஷ்வரனோட வீடு. அவனோட மகன் கூட போன வருசத்துல பார்ட்டி நடத்தி நீ அரெஸ்ட் பண்ணியே விஷால்.. அதே வீடுதான்.!" சின்னையன் சொல்லி முடித்த வினாடி சின்னையனின் நெற்றியில் இறங்கியிருந்தது துப்பாக்கி குண்டு ஒன்று.

"பாஸ்.." அதிர்ச்சியோடு திரும்பினாள் லாவண்யா.

"இவனுக்கான மரியாதை அவ்வளவுதான் லா.! அந்த வீடு எனக்கு தெரியும். இவனை இத்தனை நேரம் உயிரோடு விட்டதே எனக்கு பெரிய விசயம்.!" என்றவன் "இந்த பாடியை டிஸ்போஸ் பண்ண யாரையாவது வர சொல்லு.. இப்படி ஒரு ஜீவன் வாழ்ந்ததுக்கான அடையாளம் கல்லறை காட்டுல கூட இருக்க கூடாது.!" என்றவன் அங்கிருந்து வெளியே நடந்தான்.

"நவீன்.. உன்னை நான் எப்பவுமே நம்ப கிடையாது.. அதனால.." என்று நவீனின் கையில் விலங்கை பூட்டினான் விஷால்.

"நீ இப்படியே இரு.. நான் அந்த பொண்ணை காப்பாத்திய பிறகு உன்னை எங்க சார்க்கிட்ட ஒப்படைச்சிடுறேன்.!" என்று சொல்லியடி அவனை தனது காரில் ஏற்றினான்.

ரதியும் லாவண்யாவும் சின்னையனின் பிணத்தை வெறித்தபடி நின்றிருந்தார்கள்.

"இவனை போல ஆட்கள் இன்னமும் இந்த நாட்டுல இருக்காங்கன்னு என்னால நம்பவே முடியல லா.!" அதிர்ச்சியோடு சொன்னாள் ரதி.

"இவனை போல ஆட்கள் இல்லன்னாதான் ஆச்சரியப்படணும் ரதி.. எல்லா நாட்டிலும் இப்படி சிலர் இருந்துட்டுதான் இருக்காங்க.. தான் மட்டும் உயரணும், தான் மட்டும் வாழணும் இதுதான் அவங்களோட எண்ணம்.!" என்றாள்.

***

ரூபிணிகா கண்களை விழித்தபோது ஒரே கருப்பாக இருந்தது. சில நிமிடங்களுக்கு பிறகு கதவு ஒன்று திறந்தது. அதிலிருந்து தங்சேயா வந்தான்.

"ஹாய் பாப்பா.." என்றபடி வந்து அவள் முன் அமர்ந்தவன் பெரிய சாக்லேட் பாய் ஒன்றை அவளிடம் நீட்டினான்.

"நான் எங்கே இருக்கேன்.? எங்க அம்மா அப்பாவெல்லாம் எங்கே.?" சுற்றும் முற்றும் பார்த்தபடி கேட்டாள்.

"உங்க அப்பாவும் அம்மாவும் உன்னை வேணாம்ன்னு சொல்லி ஒரு கோவில் கூட்டத்துல தொலைச்சிட்டு போயிட்டாங்க. ரொம்ப கெட்ட பேரண்ட்ஸ்.. ஆனா நான் உன்னை காப்பாத்திட்டேன்.. இனி உனக்கு எந்த பிரச்சனையும் இல்ல.." என்றான் அவன்.

"எங்க அப்பா அம்மா அப்படி இல்ல.. நான்தான் யானை பார்க்க வந்து தொலைஞ்சிட்டேன்.. போலிஸ் அங்கிள்ஸ்கிட்ட சொன்னா என்னை பத்திரமா வீட்டுக்கு கொண்டு போய் விட்டுடுவாங்க.." என்றவளிடம் மறுப்பாக தலையசைத்தவன் "அது முடியாது.. நீ இப்ப அவங்களை விட்டு தூரமா இருக்க.. இனி உன்னால அவங்களை பார்க்கவே முடியாது.. உன்னை மாதிரி நல்ல குழந்தையை தொலைச்சதுக்காக அவங்க ரொம்ப பழி வாங்கப்பட போறாங்க.." என்றான்.

"இல்ல.. நான் எங்க அப்பாக்கிட்ட போகணும்.. நீங்க பூச்சாண்டி மாதிரி இருக்கிங்க.." என்றவள் அந்த இருட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள்.

வெளியே வந்ததும் திகைத்து நின்று விட்டாள். சுற்றிலும் நீராக இருந்தது. வேகமாய் சென்றுக் கொண்டிருந்த சொகுசு படகு ஒன்றின் நடுவில் இருந்தாள் அவள். பயத்தோடு தங்சேயாவை திரும்பிப் பார்த்தாள்.

"என் ஸ்னாக்ஸை திருடாதே மாது.. அப்புறம் உன்னை பூச்சாண்டிக்கிட்ட பிடிச்சி தந்துடுவேன்.!" அத்தை மகன் என்றோ சொன்னதை நினைத்து இப்போது விம்மினாள். யானையின் பெயர் சொல்லி அழைத்து வந்து அவன்தான் தன்னை இந்த பூச்சாண்டியிடம் தந்து விட்டதாக நினைத்தது அவளின் ஒன்பது வயது‌ குழந்தை மனம்‌.

"நம்ம சாம்ராஜ்யத்துக்குள்ள போக போறோம்..‌ நம்மோட அந்த சாம்ராஜ்யத்தை இந்த உலகம் முழுக்க பரப்ப போறோம்.. நீயும் என்னோடு இருக்க போற.." என்றவன் "பாப்புக் குட்டி பேர் என்ன.?" என்றுக் கேட்டான்.

"ரூ.‌.ரூபி.." விம்மியபடியே சொன்னாள் அந்த சிறுமி.

அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே

VOTE

COMMENT

SHARE

FOLLOW

Post a Comment

0 Comments