Advertisement

Responsive Advertisement

தேவதை 7

பால்வெளி அண்டத்தில்..


ஹார்ட் அப்படியும் இப்படியுமாக நடந்துக் கொண்டிருந்தார்.


"ஆதி இனி வருவாளா?" என்றுக் கேட்டார்.


ஆக்சிசன் சிரித்தான். 


"நீதான் முக்காலமும் உணர்ந்தவர் ஆயிற்றே!" என்றான்.


"ஆனால் திடீரென்று நிகழும் சில விசயங்களால் எதிர்காலம் மாறும் இல்லையா? அதனால் எதிர்காலத்தை கணிக்க கூடிய நம் சக்தியும் மாறும் இல்லையா?" என்றாள் ஃபயர்.


"அப்படியும் கூட இருக்கலாம். ஆனால் எதிர் காலமோ இறந்த காலமோ அனைத்து காலத்திற்கும் நாம்தான் பொறுப்பே தவிர நமக்கு உதவி செய்ய வரும் ஆதி கிடையாது.." என்றார் அக்வா.


"எது என்னவோ? வெறுமனே இருந்து எனக்குச் சலிக்கின்றது. நான் அந்த கிரகத்திற்கு சென்று உயிர்களை உருவாக்கலாம் என்றிருக்கிறேன்." என்றார் ஹார்ட்.


ஃபயர் சிரித்தாள். "உமது கணக்கின்படி நான்காம் கிரகத்தில்தான் உயிர்கள் உருவாக வேண்டும். ஆனால் முதல் கோணலாக மூன்றாம் கிரகத்தில் வந்து தனது சோகத்தை பொழிந்து விட்டாள் ஆதி.  நீ விரும்பும்படி உலகம் வேண்டுமானால் மூன்றாம் கிரகத்தில்தான் உயிர்களை உருவாக்க முடியும். ஆனால் நான்காம் கிரகத்திற்கான விதிதான் அமையும்.."


"ஆக ஆரம்பமே குழப்பமும், சிக்கலும்." என்றான் ஆக்சிசன்.


"அதே!" என்று தலையாட்டினாள் ஃபயர்.


"எது நடந்தாலும் நீங்க எல்லோருக்கும் அதுக்கு பொறுப்புதான். அதை மறந்துட்டாதிங்க." என்ற ஹார்ட் பூமியை நோக்கி புறப்பட்டார்.


"நான் போய் அழகான ஜீவன்களை உருவாக்க போறேன்." என்றார் போகும் வழியில்.


"நிச்சயம் அது தோல்விதான்." கேலியோடு சொல்லியபடி அந்த பிரபஞ்ச வெளியை சுற்றிப் பார்க்க கிளம்பினாள் ஃபயர்.


ஹார்ட் புவி கிரகத்திற்கு வந்தார். அங்கிருந்த கடற்கரையில் அமர்ந்தார். 


எங்கும் நீர். எங்கும் மண். இதை தவிர வேறு எதுவும் இல்லை அந்த உலகில். ஹார்ட் யோசித்தார். என்ன செய்வது என்று சிந்தித்தவர் "எங்கே உயிரை உருவாக்குவது? முதலில் இந்த நீரிலேயே உருவாக்குவோம்." எனச் சொல்லியபடி தண்ணீரில் கை காட்டினார். அவரின் கையிலிருந்து வெளிவந்த சக்தி அந்த தண்ணீரோடு கலந்தது.


தண்ணீரை பார்த்தார். தெளிந்த நீர் நீலமாக தெரிந்தது. 


"ஆன்மாவை உட் செலுத்தி விட்டேன். ஆனால் எப்படி உயிர் உருவாகும் என்பதை மறந்து விட்டேனே!" கவலையாக சொன்னார்.


ஒவ்வொரு முறையும் உயிர்களை தோற்றுவிப்பது விபத்து போலவேதான் நடக்கிறது. எவ்வளவு திட்டமிட்டாலும், எவ்வளவு முடிவெடுத்தாலும் கடைசியில் விபத்தேதான் அனைத்தையும் நடத்துகிறது.


"கடவுளுக்கே தடைகள். பாவம் நான்!" என்றார்.


அவர் அனுப்பிய ஆன்மாக்கள் தண்ணீருக்குள் கலந்து கரைந்துக் கொண்டிருந்தன.


***


கவி தனது பயிற்சியை முடித்துக் கொண்டு தனது வீட்டிற்கு திரும்பினான். அவனது மரத்தின் கீழே நின்றிருந்தாள் ஆதி.


"இவ ஏன் இங்கே இருக்கா?" குழப்பமாக யோசித்தபடி நெருங்கினான்.


மரத்தின் மீதிருந்த அழகான பனிப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் ஆதி. கவி வந்து நின்றதை அவள் கவனிக்கவில்லை. ஆனால் தன் மரத்தில் இருந்து தினமும் காணாமல் போகும் பூக்கள் எப்படி காணாமல் போகிறது என்பதை அவனால் அறிந்துக் கொள்ள முடிந்தது.


ஆதி பூக்களை பறிக்க பறிக்க அந்த பூக்கள் தானாய் மாலையாக மாறிக் கொண்டிருந்தது. வால் போல வளர்ந்துக் கொண்டிருந்த பூ மாலையை ஒரு கணம் திரும்பிப் பார்த்தவள் போதுமென்ற எண்ணத்தோடு அந்த மாலையை இணைத்தாள். தன் கழுத்தில் அணிந்துக் கொண்டாள். புன்னகை முகம் முழுக்க பரவியது.


கவி தன் தலையை உதறிக் கொண்டான். எப்படி இவளால் இவ்வளவு அழகாய் சிரிக்க முடிகிறது என்று ஆச்சரியப்பட்டான்.


"தினமும் அழகான பூக்களை எனக்கு பரிசாக தரும் மரமே, நீ இது போல நூறு மடங்கு பூக்களை பூக்க வேண்டும்.." என்று அன்போடு மரத்தின் தண்டை தடவி தந்துவிட்டு திரும்பினாள் ஆதி. எதிரில் நின்றிருந்தவனை கண்டு பயந்து ஓரடி பின்னால் நகர்ந்தாள்.


"நான் என்ன பனி மிருகமா? என்னைப் பார்த்து ஏன் பயம் கொள்கிறாய்?" கேலியோடு அவளை நெருங்கினான் கவி.


"மன்னிக்க வேண்டும் ஏந்தலே! பனிப் பூக்களின் மீது கொண்ட ஆசையால் உங்களிடம் அனுமதி கேட்காமல் பூக்களை பறித்து விட்டேன். இனி இப்படி தவறு செய்ய மாட்டேன்." என்றாள் நடுங்கும் குரலில்.


கவிக்கு உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை கிறக்கம் ஓடியது. அவளின் கெஞ்சல் ஆனந்தத்தை தந்தது. அவளின் பயம் அவனுக்கு இன்பத்தைத் தந்தது.


"உனக்கு பூக்கள் வேண்டுமானால் தினமும் பறித்துக் கொள்." என்றான்.


ஆதி பயத்தோடு மறுப்பாக தலையசைத்தாள். அவனைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் போயும் போயும் இந்த மரத்தை நாடியா பூ பறிக்க வர வேண்டும் என்றெண்ணி தன்னையே திட்டிக் கொண்டாள்.


தினமும் அவன் வரும் முன்பே பூ பறித்துக் கொண்டு ஓடி விடுவாள். அந்த உலகில் இருந்த மற்றவர்கள் யாரும் இதற்கு தடை சொல்லவும் இல்லை. ஆனால் இன்று எப்படியோ நேரம் கடந்துவிட்டது.


ஆதியின் மூச்சுப் படும் தூரத்திற்கு நெருங்கினான் கவி. அவளின் மூச்சு காற்று அவனது மூச்சுக் காற்றோடு கலந்ததும் அவனுக்கு என்னவோ போல இருந்தது.


ஆதியின் வலதுத் தோளின் மீது அவனது இடது கரம் பதிந்தது. இங்கே வந்ததில் இருந்து பனியுடைதான் அணிந்திருந்தாள் அவள். நெஞ்சின் மீதிருந்து கணுக்கால் வரை பரவியிருந்த அந்த பனியுடை இங்கே காணாத வகையில் ஒரு வித நீலமும், சிகப்பும் கலந்த வண்ணத்தில் இருந்தது.


ஆதியின் சிறிய இதயம் நடுங்கியது. அவனின் தொடுகையில் கரைந்து விடுவோமோ என்று பயந்தாள். நெருப்பின் தணலை போல இருந்தது அவனின் தொடுகை. ஏனோ உள்ளுக்குள் பிடித்திருந்தது. ஆனால் அந்த பிடிப்பை விடவும் பயம்தான் அதிகமாக இருந்தது. 


அன்பின் தேவதையாக இருப்பது எவ்வளவு கடினம் என்று அவளுக்குதான் தெரியும். அன்பை அனைவருக்கும் தர வேண்டி இருக்கும். அந்த அன்பை கட்டுப்படுத்தும் வழி இருக்கவே இருக்காது. எதிரி, துரோகி என்ற பாரபட்சம் கூட இருக்காது அந்த அன்பிற்கு. ரோசமில்லாத அந்த அன்பாலேயே உருவாக்கப்பட்ட ஆதிக்கு உருகுவதையும், கரைவதையும் தவிர வேறு வழி தெரியவில்லை.


அவள் உருகினாளோ இல்லையோ அவளுக்கு முன்பு கவி கரைந்தான். என்னவோ செய்தது. அவளின் மாசற்ற கண்கள் அவனை கைது செய்ய துடித்தது. அப்பாவியான அவளின் முகம் அவனை அசைத்துப் பார்த்தது.


அவளின் தோளில் இருந்த அவனது கரம் மெள்ள மேலேறியது. அவளின் கழுத்தை தாண்டி மேலேறியது. ஆதியின் கண்களில் உயிர் பயம் அப்பட்டமாக தெரிந்தது. 


அதை கண்ட ஆதி தன் கரத்தை அவளின் கழுத்திலேயே நிறுத்தினான். அவளின் கழுத்தை சற்று அழுத்தினான். அவளின் கன்னத்தில் தன் கன்னத்தை வைத்து உரசினான்.


"பயமா? என்னைக் கண்டா?" 


"என்னை.. என்னை விட்டு விடுங்கள் ஏந்தலே! இனி உங்களின் வீட்டருகே வர மாட்டேன்." கெஞ்சினாள்.


"உன் மாய பண்பு அடுத்தோரை மயக்குவதுதான். அந்த மாயத்தை வைத்துதான் இப்போது என்னையும் மயக்க வந்துள்ளாயா?" எனக் கேட்டான் கண்களை சாய்த்து.


ஆதி அவசரமாக இடம் வலமாய் தலையசைத்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments