Advertisement

Responsive Advertisement

தேவதை 43

 சத்திய தேவ உலகத்தை சுற்றி நின்றது ஆகாய விமானங்கள் பல. அனைத்திலும் மனிதர்கள் இருந்தார்கள். அவர்களிடம் ஆயுதங்கள் இருந்தது‌. வெற்றிக் கொண்ட கிரகங்களில் இருந்து தங்களுக்கு தேவையான ஆயுதங்களை கைப்பற்றிக் கொண்டவர்கள் அவர்கள்.


கவி இப்படியொரு நிலை வரும் என்று எதிர்ப்பார்க்கவே இல்லை.


அவனின் மகாராணி அவனுக்கு எதிராய் இருந்தாள். மனிதர்களை தன் வசம் பிடித்துக் கொண்டாள். இப்போது போருக்கு வந்து விட்டாள்.


கவி தலையை பற்றினான். பனி சிகரம் ஒன்றில் சென்று சோர்வாக அமர்ந்தான். அவளோடு வாழ்ந்த நாட்கள் அனைத்தும் நினைவிலேயே இருந்தன.


அவளை எதிரியாய் பார்ப்பது நடக்க இயலாத காரியம். அவள் அவனின் மறு ஜீவன். இருவரும் மணம் முடிந்து விட்டிருந்தனர். பிரபஞ்சத்தை சாட்சியாக வைத்து சத்தியம் செய்திருந்தனர். எப்படி அவன் கோபித்துக் கொள்வான்?


ஆனால் அவள் வெறுத்தாள். வெறுப்பை அறிந்திருந்த பிரபஞ்சத்தில் அவளிடம் இருந்து வெறுப்பு பரவிக் கொண்டிருந்தது. கவியை வெறுத்தாள். சத்திய தேவ உலகை வெறுத்தாள். பிரபஞ்சத்தில் யாரெல்லாம் அவளுக்கு எதிரியாய் வந்தார்களோ அவர்கள் அனைவரையும் வெறுத்தாள்.


அவளின் சகோதர சகோதரிகள் அன்பை கடைபிடிக்க சொன்னபோது அவள் கேட்க மறுத்து விட்டாள். 


"ஆதி உனக்கு என்னவோ ஆயிடுச்சி.‌ நாம பேசி தீர்த்துக்கலாம்.!" என்று கவி சொன்னதையும் கேட்க மறுத்து விட்டாள்.


"உங்களை அழிப்பேன்.!" என்று கர்ஜித்தவள் அங்கிருந்து கிளம்பி விட்டாள்.


நேராக அவள் சென்றது பிரபஞ்சத்தின் உண்மை சொல்லும் கண்ணாடியிடம்தான்.


"நான் ஆதி. அன்பின் தேவ உலகின் கடைசி இளவரசி. நான் எந்த அண்டத்தின் கிரகத்திற்கு காப்பாளினி தேவதை என்று சொல்ல முடியுமா?" எனக் கேட்டாள்.


அவளுக்குள் வெறுப்பு ஊறிக் கொண்டிருந்தது. அந்த வெறுப்பால் இந்த பிரபஞ்சத்தையே அவளால் அழிக்க முடியும். ஆனால் அவள் தன் கடமையை தவற விட விரும்பவில்லை. தனது கிரகத்திற்கு சென்று தன்னால் பணி ஏற்க முடியாது என்று முறைப்படி சொல்லிவிட்டு வந்து இந்த உலகை அழிக்க ஆசைப்பட்டாள். இந்த உலகை அழிக்கையில் தானும் சேர்ந்து அழிவோம் என்று நம்பினாள். அவளுக்கு‌ இப்போது மரணத்தை கண்டு பயமில்லை. அந்த அளவிற்கு வெறுப்பு அவளை ஆக்கிரமித்து இருந்தது.


"பால்வெளி அண்டத்தின் செவ்வாய் கிரகத்திற்கு நீ காப்பாளினி. ஆனால் சிறு தவறால் உனது பணி மாற்றப்பட்டு விட்டது. பால்வெளி அண்டத்தில் சூரிய குடும்பத்தில் உள்ள பூமி கிரகத்திற்கே நீ காப்பாளினியாக நியமிக்கப்பட்டு உள்ளாய்.!" என்றது அந்த கண்ணாடி.


ஆதி சிரித்தாள். கசந்து சிரித்தாள். இதயம் வலித்தது அவளுக்கு. வெறுப்பை தாண்டியும் ஏதோ ஒரு உணர்வு அவளை பிடித்துக் கொண்டது. தனக்கான கிரகம் பூமி கிரகமாய் இருக்கும் என்று அவள் யோசிக்கவேயில்லை. 


பால்வீதி கடவுள்கள் தன்னிடம் அவ்வளவு இணக்கமாக நடந்துக் கொண்டதன் காரணம் அவளுக்கு இப்போதுதான் புரிந்தது. அனைவரும் சுயநலவாதிகள் என்று வெறுப்பாக நினைத்தாள்.


அவள் ஒரு கிரகத்திற்கு காப்பாளினியாய் பதவி ஏற்க இன்னும் சில ஆயிரம் வருடங்கள் இருந்தது. இன்னமும் பதவிகளில் அவள் சிறுமிதான். ஆனால் இப்போது அவள் வேறு ஒன்றை நினைத்தாள்.


நேராக பூமி கிரகம் சென்றவள் "எனக்கு உங்களின் உதவி வேண்டும் மக்களே.. நீங்கள் வீரத்தின் விளைநிலம் என்று நான் அறிவேன். சத்திய தேவ உலகத்தை நான் அழிக்க வேண்டும். அதற்கு நீங்கள் துணையாய் வேண்டும்.!" என்றுக் கேட்டாள்.


பூமிவாசிகள் உடனே ஒப்புக் கொண்டார்கள். சத்திய தேவ உலகிற்கு வழி காட்டினாள் ஆதி. சத்திய தேவ உலகத்தை சுற்றி வளைத்தார்கள்.


"என்ன செய்றிங்க? நீங்க என் பிள்ளைகள்.!" என்றான் கவி.


"மன்னிக்கவும் தந்தையே.. எங்களுக்கு எங்களின் தாய்தான் முக்கியம்.!" என்றார்கள் அவர்கள்.


கவியால் அவர்களை நம்ப முடியவில்லை.


"இந்த பிரபஞ்சத்தில் எங்கேயும் தாயை விட தந்தையே உயர்ந்தவர்.!" என்றான் சத்திய தேவன் ஒருவன்.


"மீண்டும் மன்னிக்கவும். நாங்கள் பால்வீதியை சேர்ந்தவர்கள். எங்களுக்கு எப்போதும் தாய்தான் முக்கியம். எங்கள் தாயார் உங்களின் காரணமாக அழுதுள்ளார். உள்ளம் உடைந்துள்ளார். அதற்கு நாங்கள் பழி வாங்க போகிறோம். உங்கள் அனைவரையுய் அழிக்க போகிறோம்.!" என்ற மனிதர்கள் தங்களின் ஆயுதங்களை வெளியே எடுத்தார்கள்.


அவர்களை தடுக்க கவி போராடினான். ஆனால் அவர்களோ தங்களின் கண்களில் இருந்த அன்பின் சக்தியை பயன்படுத்தி அவர்களை சரணடைய வைக்க முயன்றார்கள். இதை ஆதியே கூட எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவளுக்கு இது பிடித்திருந்தது.


கவியே குழம்பினான். அவர்களின் கண்களில் விழுந்தான்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..


VOTE


COMMENT


SHARE


FOLLOW



Post a Comment

0 Comments