Advertisement

Responsive Advertisement

தேவதை 54

 ஆரம்பத்தில் தனது வலியின் காரணத்தை புரிந்துக் கொள்ளவில்லை கவி. பழைய வலி என்றே நினைத்திருந்தான். ஆனால் அதன் பிறகே ஃபயரின் உதவியால் தனது வலியின் காரணம் அறிந்தான்.


பூமிக்கு ஓடி வந்தான். அங்கிருந்த மனிதர்களை கண்டான். அப்போதுதான் ஆதி தனக்கு செய்திருக்கும் துரோகமே அவனுக்குத் தெரிந்தது.


அவளை தேடி போனான். உச்சி பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தவள் அவனின் வருகைக்காக காத்திருந்தது போலவே இருந்தாள்.


"வாருங்கள் ஏந்தலே!" என்றவளை முறைத்தவன் "என்னை ஏன் வதைக்கற ஆதி? நீ ஒரு அன்பின் தேவதைதானே? ஆனா ஏன் தெரிஞ்சே என்னை கொல்லுற.. இது வலிக்குது ஆதி!" என்று நெஞ்சை தொட்டுக் காட்டினான்.


"உயிரோடு சாகறது ரொம்ப கஷ்டமா இருக்கு.!"


"ஓ.." என்றவள் அங்கிருந்த வானத்து மேகங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


"என் பிள்ளைகள் இவர்கள். இவங்களுக்கு ஆயுளை வெறும் நூறு வருசம் மட்டும் தந்திருக்க. மூப்பு தந்திருக்க.. இது எவ்வளவு விசித்திரமான ஒன்னு தெரியுமா? பிரபஞ்சத்தில் பிறந்த எந்த உயர்நிலை உயிருக்குமே மூப்பும், இயற்கை மரணமும் கிடையாது.!" பாடம் எடுத்தான்.


ஆதி காதிலேயே வாங்கவில்லை. வானத்தின் மேற்கில் மறைந்துக் கொண்டிருந்த சூரிய கதிர்களை ரசித்துக் கொண்டிருந்தாள்.


"ஆதி.."


"உன் பிள்ளைகள் என்றுமே உயர்நிலை உயிர் கிடையாது. அதனால்தான் நான் அவங்களுக்கு இப்படி மூப்பையும் மரணத்தையும் வடிவமைச்சேன். தினமும் லட்சம் பேர் சாகணும். நீ உயிரோடு வேகணும். அப்பதான் எனக்கு நிம்மதி.." என்றாள் சிவந்த கண்களோடு.


"என்னை இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள்தான் பழி வாங்க போகிறாய்?" ஆத்திரத்தோடு கேட்டவனை கண்டு சிரித்தவள் "என் மனம் ஆறும் வரை.. எனது காயங்களின் தழும்புகள் மறைந்துப் போகும் வரை.." என்றாள்.


கவி அதிர்ச்சியோடு அவளைப் பார்த்தான். அவளே நேரடியாக ஒத்துக் கொண்டது அவனுக்கு பேரதிர்ச்சியை தந்தது.


"இங்கே மனிதர்கள் இறந்துக் கொண்டே இருப்பார்கள். நீ அந்த வலியை உணர்ந்துக் கொண்டே இருப்ப.. இது முடியாத தொடர்கதை.." என்று பிரபஞ்சம் குலுங்கும் அளவுக்கு சிரித்தாள்.


"ஆக இப்படி அந்த கதை முடியும்.." என்ற ஃபயரை பார்த்து சிரித்த அக்வா ஃபயரிடம் கதை கேட்டுக் கொண்டிருந்த ஆக்சிஜனை பார்த்து அதிகம் சிரித்தார்.


"இதுதான் அந்த கதையோட முடிவுன்னு நீ நம்புறியா?" எனக் கேட்டார்.


ஆக்சிஜன் மறுப்பாக தலையசைத்தான். 


"இது நல்லாவே இல்ல. ஒரு அன்பின் தேவதை எப்போதும் அன்பை தந்தாள், அன்பை பரப்பினாள்ன்னு இப்படிப்பட்ட  வாசகங்களோடுதான் கதை முடியணும். அதுதான் ஊர் வழக்கம். உலக வழக்கமும் கூட.." என்றான்.


ஃபயர் முறைத்தாள். "எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.."  என்றாள்.


"இல்லை.. இதை நான் சொல்றேன்.." என்ற அக்வா அக்கதையை சொல்ல ஆரம்பித்தார்.


ஆதி தனது புவியில் அனாதை போல அமர்ந்திருந்தாள். அவளுக்கு அனாதை எனும் உணர்வு நொடிக்கு நொடி அதிகரித்துக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று யோசித்தவள் தன்னிடமிருந்த ஆன்மாக்களுக்கு உருவம் தந்து மனிதர்களாக உருவாக்கி விட்டாள். அவளுக்கு பயமாக இருந்தது.


அன்பின் மீதான பயமும், அன்பு காட்டுவோர் மீதான பயமும் அவளை எதுவுமே செய்யாத அளவுக்கு தடுத்தன. ஆனால் ஆதி அப்போதுதான் ஒரு யோசனை செய்தாள். தனது கிரகத்தில் படைக்கப்படும் குழந்தைகளுக்கு குறைவான ஆயுள் தந்தால் பிறகு அவர்கள் அடிக்கடி இறப்பார்கள். தனக்கு எது பயத்தை தந்ததோ அதையே தனது பலமாக மாற்ற விரும்பியவள் குறைந்த ஆயுளை மனிதர்களுக்கு தந்தாள். 


ஆரம்பத்தில் மனிதர்கள் இறந்தபோது அவர்களின் மரணத்தை ஏற்க முடியாமல் கதறி அழுதாள். ஒற்றை மரணத்தை கண்டாலே உடைபவள் இப்போது தினமும் பல மரணம் கண்டு நெஞ்சுடைந்து அழுதாள். 


ஆனாலும் அதில் ஒரு நன்மை இருந்தது. அவள் விரைவிலேயே மரணங்களை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். மனிதர்கள் தன் மீது காட்டிய அன்பில் மூழ்கி திளைத்தாள்.


வருடங்கள் ஓடிக் கொண்டிருந்தது. மனிதர்கள் மரித்து மரித்து பிறந்தார்கள். ஆதியின் மீது வரம்பற்ற அன்பு காட்டினார்கள். ஆதி மட்டும் அதே இடத்தில் இருந்தாள். தனக்கு தேவையான அன்பை பெற்றுக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்தாள்.


"இப்படிதான் அந்த கதை முடியும்.!" என்ற அக்வாவை பார்த்து முறைத்தான் ஆக்சிஜன்.


"அதுக்கு ஃபயர் சொன்னதே பரவாயில்லை. நீ சொன்னது படுமோசம்.. முடிவை நான் சொல்கிறேன் கேள்.." என்றவன் அவனது முடிவை சொல்ல ஆரம்பித்தான்.


ஆனா அந்த முடிவை நான் நாளைக்குத்தான் சொல்வேன். 



Post a Comment

0 Comments