Advertisement

Responsive Advertisement

சாபமடா நீ எனக்கு 76

 சங்கவி தன் தந்தையின் வீட்டு கதவை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தாள். அப்பா தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். பவளம் அவருக்கு முன்னால் அமர்ந்து சங்கவியின் அம்மாவுடைய பழைய சேலையை வைத்து என்னவோ செய்துக் கொண்டிருந்தாள்.


சங்கவி‌ வந்ததை பவளம்தான் முதலில் பார்த்தாள்.


"வா பாப்பா.." எழுந்து வரவேற்றாள்.


அப்பாவின் அருகில் சென்று அமர்ந்தாள் சங்கவி. பவளம் சூடாக காப்பியை கொண்டு வந்து‌ தந்தாள்.


"தனியா கஷ்டப்படுறிங்களேப்பா.. அந்த‌‌ வீட்டுக்கு வரலாமே.." தயக்கமாக சொன்னாள்.


திரும்பிப் பார்த்து முறைத்தார் அவர்.


"அவன் இருக்கற வீட்டுல நான் இருக்க மாட்டேன். அவன் சாகற அன்னைக்குதான் எனக்கு நிம்மதி.."


சங்கவிக்கு காப்பி இறங்கவில்லை. கண்ணீர்தான் இறங்கியது. ஆதீரனுக்கு ஏதாவது ஒன்றென்று நினைத்துப் பார்த்தால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவனை பொக்கிஷம் போல பார்த்துக் கொள்ள நினைத்தாள்.


இந்த வீட்டிற்கு வந்தது தனது தவறு என நினைத்தாள். ஆனால் அப்பாவை வெறுத்து ஒதுக்க முடியவில்லை. 


அரை மணி நேரம் கடந்தது. யாருமே எதுவுமே பேசவில்லை. மௌனம் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த இடத்தில் சங்கவியின் போன் ஒலித்து கவனத்தை கலைத்தது.


ஆதீரன்தான் அழைத்திருந்தான்.


"மாமா.." இவளின் அழைப்பு குரல் கேட்டு முகம் சுளித்தார் மோகன்.


"என்ன பண்ற.?" 


"அம்மா வீட்டுக்கு வந்திருக்கேன் மாமா.." 


"உன்னை ரெஸ்ட் எடுக்கதானே டாக்டர் சொல்லி இருக்காங்க.? நீ எதுக்கு அங்கே போன.? காலையில் நான் கிளம்பும்போது சொல்லியிருந்தா கூட உன்னை விட்டுட்டு வந்திருப்பேன். இந்த ரோட்ல நீ பஸ்லயோ ஆட்டோவுலயோ போனா அப்புறம் எப்படி உடம்பு குணமாகும்.?" போனிலேயே வறுத்தெடுத்தான்.


"ஒன்னும் இல்ல மாமா. நல்லாதான் இருக்கேன்.."


"உனக்கு அறிவு இல்லடி. என்னை மனுசனாவே மதிக்கறது இல்ல நீ. அதனாலதான் உன் பாட்டுக்கு இருக்க.."


"சாரி.." சரணடைந்து விட்டாள். அதற்கு மேல் அவனிடம் திட்டு வாங்குவதற்கு உடலிலோ மனதிலோ தெம்பில்லை.


"கிளம்பிடுவியா.? இல்ல ஈவினிங் வரை இருக்க போறியா.?" 


அப்பாவின் முகம் பார்த்தவள் "கிளம்பலாம்ன்னு இருக்கேன் மாமா.." என்றாள்.


"சரி நான் காரை அனுப்பி வைக்கிறேன்.." என்றவன் இணைப்பை துண்டித்துக் கொண்டான்.


மோகன் அதன் பிறகும் கூட தொலைக்காட்சியைதான் பார்த்தார். மகளின் புறம் திரும்பவேயில்லை.


"சாப்பிடுவ வா பாப்பா.." அழைத்தாள் பவளம்.


"இ.. இல்லக்கா. நான் சாப்பிட்டுதான் வந்தேன்.." அவளுக்கு முள்ளின் மீது நிற்பது போலிருந்தது. ஒவ்வொரு முறையும் இங்கே வரும்போது அப்படிதான் தோன்றியது.


கால் மணி நேரம் கடந்து போனது. ஆதீரனின் கார் சத்தம் கேட்டது. தந்தையிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.


காரை ஓட்டி வந்திருந்த ஆதீரனின் பர்சனல் அசிஸ்டென்ட் இவளை பார்த்து சினேகமாக புன்னகைத்தான்.


கார் வீட்டுக்கு செல்லாமல் வேறு திசையில் பயணித்தது.


"ஏன் இந்த வழியில் போறிங்க.?" 


"சார் உங்களை ஆபிஸ் கூட்டி வர சொல்லியிருக்காரு மேடம்.." 


"சிஸ்டர்ன்னு கூப்பிடுங்க.."


"ஓகே சிஸ்டர். நான் தட்சணாமூர்த்தி. சுருக்கமா தட்சணான்னு கூப்பிடுவாங்க. உங்களுக்கு வேணும்ன்னா கூட நீங்களும் அப்படியே கூப்பிடுங்க.."


"இல்லைங்க. நான் பிரதர்ன்னே கூப்பிடுறேன்.." என்றவளை அலுவலகத்தினுள் வழி நடத்திச் சென்றான். 


அலுவலகம் வந்து சேர்ந்தாள். அக்கா இங்கேதான் மூன்று வருடங்கள் வேலை செய்துள்ளாள் என்ற நினைவு வந்ததும் மனம் பாரமானது. அலுவலகம் முழுக்க அவள் வாசமே வீசுவது போலிருந்தது. சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களிலிருந்து, மேஜைகளின் அணிவகுப்பு வரை அவளின் கை வரிசைதானோ என்று தோன்றியது. உண்மையிலேயே அத்தனையும் குந்தவியின் கைவரிசைதான். அவள் விருப்பப்பட்டது போலதான் அந்த அலுவலகத்தை வைத்திருந்தாள். ஆதீரனும் அதை கொஞ்சமும் மாற்றாமல் அப்படியே விட்டு வைத்திருந்தான்.


கிராமப்புறமும், நகரத்து ஓரங்களில் இருக்கும் சிற்றூர்களும்தான் இந்த நிறுவனத்தின் பாதி வாடிக்கையாளர்களை கொண்ட இடங்களாக இருந்தது. அவர்களுக்கு தேவைப்படும் கடனை வழங்கிவிட்டு மாதம்தோறும் தவணை முறையில் கடனை வசூலித்துக் கொள்வார்கள். நீண்ட நாட்கள் தவணை என்பதால் தவணை தொகை குறைவாக இருக்கும். கட்டுபவர்களுக்கு கஷ்டம் தெரியாது. அப்படிதான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். ஆனாலும் கூட ஆதீரனின் நிறுவனத்தின் வளர்ச்சி மேலேறிக் கொண்டு மட்டும்தான் இருக்கிறது.


காந்திமதி ஆரம்பத்தில் சிறு வட்டி தொழிலாக ஆரம்பித்தாள். பிறகு அதையே அரசாங்க பதிவு பெற்ற நிறுவனமாக மாற்றி வைத்திருந்தாள். ஆதீரனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட பிறகு அவன் தனது பாணியில் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தான். எளிய மக்களுக்கு கடன் தரும் அவனேதான் சிறு சிறு நிறுவனங்களுக்கும் கடன் தந்து அவர்களின் வளர்ச்சியில் தன் வளர்ச்சியையும் பார்த்துக் கொண்டிருந்தான்.


ஆதீரனின் அலுவலக அறை கதவை திறந்து விட்டான் தட்சணா. உள்ளே நுழைந்த சங்கவியை பார்த்து கையை நீட்டினான். திரும்பி பார்த்தாள். தட்சணா அங்கே இல்லை. உள்ளே நடந்தாள். 


அருகில் வந்தவளை இழுத்து தன் மடியில் அமர வைத்தான். அதே நொடியில் அவளின் கழுத்தில் முகம் புதைத்தான். முத்தம்‌ தந்தவனால் சிந்தை மயங்க விரும்பாதவள் "மாமா ஆபிஸ்லயா.?" என்றுக் கேட்டு விலக முயன்றாள்.


ஆனால் அவன்தான் விலகவில்லை. பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். கதவு தட்டப்படும் சத்தத்தில் விலகினான்.


கழுத்தை தொட்டுப் பார்த்தாள். சிவந்திருக்கும் என்பது தெளிவாக புரிந்தது. இந்த அடையாளம் இன்னும் ஒரு வாரத்திற்கு மேலிருக்கும். ஆனால் எப்படியும் இதே அடையாளத்தின் மீது மீண்டும் மீண்டும் அடையாளங்களை உண்டாக்குவான். அவளால் தலை நிமிர்ந்து யாரிடமும் பேச முடியவில்லை. சேலை தலைப்பை கொண்டு எப்போதும் கழுத்தை சுற்றி வைத்திருக்க வேண்டி இருந்தது. இல்லையேல் மேக்கப்பை அதிகமாக பயன்படுத்த வேண்டியிருந்தது. தனது பிரச்சனையை அவனிடம் சொல்லி சலித்து விட்டாள். 


"நான் கிஸ் பண்ணா உனக்கு பிடிச்சிருக்குதானே.?" எனக் கேட்டான் ஒவ்வொரு முறையும்.


இல்லையென்று பொய் சொல்ல முடியவில்லை அவளால். அவளின் கழுத்தில் அவனின் இதழ்கள் பதிந்தாலே தன் வசம் இழந்து அவன் வசம் சென்று விடுகிறாள். போதும் என்று சொல்ல மனம் வருவதில்லை. அந்த முத்தங்கள் அரை மணி நேரத்திற்கு தொடர்ந்தாலும் அவளாக விலக நினைத்ததேயில்லை. 


"உனக்கு பிடிச்சிருந்தா கிஸ்ஸை என்ஜாய் பண்ணு. இங்கே எவனும் பொண்டாட்டிக்கு முத்தமே தந்தது இல்லையா.? உன்னை பார்த்து எவன் தப்பா நினைச்சா உனக்கு என்ன.? இருக்கற நிமிசத்தை முழுசா வாழு.." என்று சொல்லி வாயை அடைத்து விடுவான்.


அவன் விலகியதும் எழுந்து கொண்டாள். அருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தாள். 


உள்ளே வந்த தட்சணா "சார் மீட்டிங் ஆரம்பிக்கும் டைம் ஆகிடுச்சி.." என்றான்.


எழுந்தான். "நீ இங்கேயே இரு.. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன்.." என்றுவிட்டு கிளம்பிப் போனான் ஆதீரன்.


அவனின் இருக்கையில் அமர்ந்தாள். மேஜை மேல் இருந்த பொருட்களை எடுத்துப் பார்த்தாள். அவன் விட்டு சென்றிருந்த அவனின் போனை கையில் எடுத்தாள். அவள்தான் முகப்பு புகைப்படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள். புகைப்படத்தை கண்டு அவளுக்கும் புன்னகை அரும்பியது. 


பேனா ஸ்டேன்டில் இருந்த பேனாக்களோடு விளையாடியபடி நேரத்தை கடத்தினாள். ஆனால் ஐந்தாம் நிமிடத்திலேயே பேனா ஸ்டேன்ட் கீழே உருண்டது. அதோடு சேர்ந்து சிதறிய பேனாக்களை பொறுக்கி வைக்க எழுந்தாள். மேஜையின் அடியில் இருந்ததையும் கூட சிரமப்பட்டு எடுத்தாள்.


"எத்தனை இருந்ததுன்னு தெரியலையே.. ஏதாவது காணாம போனா திட்டுவாரோ என்னவோ.?" என்று‌ புலம்பியபடி பேனா ஸ்டேன்டை எடுத்து மேலே வைத்தாள். அவளின் கால் மோதி திறந்தது மேஜையின் டிரா ஒன்று. 


திறந்த டிராவில் குந்தவியின் புகைப்படம் மேலாகவே இருந்தது. புகைப்படத்தை கையில் எடுத்தாள். புகைப்படத்தின் பிரேமில் பூவிதழ் ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது. பூவிதழ் புது இதழாக இருந்தது. அந்த மேஜையின் மேலிருந்த பூஜாடியில் இருந்த அதே பூவின் இதழ்.


இவ்வளவு நேரமும் மேஜை மேல் இருந்த‌ புகைப்படத்தை எடுத்து இப்போதுதான் உள்ளே வைத்திருக்கிறான் என்பதை யூகித்துக் கொள்ள முடிந்தது. நெஞ்சம் விம்மியது. கண்களும் கூட ஏனோ கலங்கியது.


என்ன உணர்வென்றே அறிய முடியவில்லை. பொறாமையா, இயலாமையா, தாழ்வு மனப்பான்மையா ஒன்றும் புரியவில்லை.


புகைப்படத்தை மேஜையின் ஓரத்தில் வைத்தாள். தனக்காக அவன் இதை மறைத்து வைத்திருக்க தேவையில்லை என்றுதான் சொன்னது சகோதர மனம். ஆனால் அதே வேளையில் இந்த புகைப்படத்தை இங்கே வைத்திருக்கவே தேவையில்லை என்று அரற்றியது காதல் உள்ளம்.


அரை மணி நேரம் கடந்த பிறகு அந்த அறைக்கு வந்தான் ஆதீரன். சங்கவியை அங்கே காணவில்லை. மேஜை மேலிருந்த புகைப்படம் சேதியை சொல்லி விட்டது. 


தலையை கோதி கொண்டவன் கைபேசியை எடுத்தான். அவளுக்கு அழைத்தான்.


"மாமா.." அவளின் குரலில் தொய்வு இருந்ததை‌ புரிந்துக் கொள்ள முடிந்தது அவனால்.


"எங்கே இருக்க.?" 


"ஆபிஸ் பின்னாடி.. தோட்டத்துல இருக்கேன்.. பூச்செடிகள் அழகா இருக்கு.." 


"பைத்தியம்.." எழுந்து ஓடினான். 


தோட்டத்தின் பின் பக்கத்திற்கு வந்தான். ரோஜாக்கள் கும்பலாக பூத்திருந்த இடத்தின் நடு மத்தியில் நின்றிருந்தாள்‌ சங்கவி. அந்த தோட்டம் முழுக்கவே ரோஜாக்கள் மட்டும்தான் பல வண்ணங்களில் இருந்தன. காடு போல மண்டி கிடந்தன. பல செடிகள் அவளை விடவும் உயரமாக வளர்ந்திருந்தன. பூக்களின் மணம் நெடியாக கலந்து வீசியது.


"சங்கவி.." கடுப்போடு அழைத்தபடி பூச்செடிகளின் இடையில் நடந்தவன் அவளின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியே வந்தான். 


காலி இடத்திற்கு வந்ததும் சப்பென்று ஒரு அறையை விட்டான்.


"மெண்டலாடி நீ.?" அவளின் கைகளை பரிசோதித்தான். ரவிக்கையின் கைகள் தொடங்கும் இடத்தில் லேசாக தடிப்புகள் இருந்தன. மற்ற நேரங்களில் என்றால் அவ்வளவாக பாதிப்பு இருக்காதுதான். ஆனால் இப்போது உடல் நல குறைவோடு இருப்பவளுக்கு ரோஜாக்களின் இதழ்களும் வாசமும் சேர்ந்து அலர்ஜியை அதிகமாகவே தந்து விட்டிருந்தன.


அவளின் கைகளை விட்டுவிட்டு இரு கைகளாலும் நெற்றியை பிடித்தான். 


"ஏன்ம்மா.?" ஏக்கமாக கேட்டான்.


பதில் சொல்லாமல் தரை பார்த்தாள்.


"அந்த போட்டோ அங்கே இருக்க வேணாம்ன்னா தூக்கி குப்பையில் போடு. நான் குறுக்கே வர மாட்டேன். ஆனா இப்படி எனக்கு தண்டனை தராதே. மூனு வருசமா இருக்கற போட்டோ அது. அவ எனக்கு பிரெண்டும் கூட. சட்டுன்னு எடுத்து வைக்க மனசு வரல. சீக்கிரம் அதை அப்புறப்படுத்திடணும்ன்னுதான் நானும் நினைச்சேன்‌‌.." 


அவளை இழுத்துக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்தான். எதிர்ப்பட்ட தட்சணாவிடம் "தோட்டத்துல இருக்கும் மொத்த ரோஜா செடிகளுக்கும் நெருப்பு வைக்க சொல்லு.." என்றான்.


பூனையை தூக்கி எறிந்தபொழுது பதறியவள் இப்போது எதுவும் சொல்லவில்லை.


தனது அறையில் அமர வைத்து அவளுக்கு குடிக்க தண்ணீரை தந்தான். அலுவலகத்தின் அருகில் கிளினிக் நடத்திக் கொண்டிருந்த மருத்துவரை வரவழைத்தான். வந்த மருத்துவர் ஊசியை போட்டு விட்டு போனார்.


படபடவென்று சத்தம் கேட்டது. பூச்செடிகள் பச்சையாக எரியும் வாசமும் வந்தது.


"என் அக்காவுக்காக அந்த செடிகளை வச்சி இருக்கிங்க இல்லையா.? என்னாலதான் அந்த செடிகளுக்கு பிரச்சனை.."


அவள் முன் அமர்ந்தவன் "அதுவும் மூனரை வருசமா இருக்கு. நான் அதையெல்லாம் கண்டுக்க கூட இல்ல இந்த ஆறேழு மாசமா.. நீ ஏன்டி அங்கே போய் நின்ன.? சாக ஆசையா.?" என்றான் கடைசியில் கத்தலாக.


பிடித்து வைத்த பிள்ளையார் போல முகத்தை வைத்திருந்தாள்.


அவளின் வலது புறங்கையின் மீது முள் கிழித்த தடம் இருந்தது. அவளை வெளியே இழுத்து வருகையில் முள் ஒன்று குத்தி விட்டது புரிந்தது.


அவளின் கையை எடுத்து காயத்தின் மீது வருடினான்.


"உடம்பு இப்ப எப்படி இருக்கு.?" தடிப்பு இருந்த இடங்களை பரிசோதித்தபடி கேட்டான். தடிப்புகள் மறைந்து போயிருந்தது.


"நம்பும்மா.. இந்த மனசுல சத்தியமா நீ மட்டும்தான் இருக்க.." அவளின் கையை எடுத்து தன் இடது நெஞ்சின் மீது பதித்தபடி சொன்னான். 


சமாதான வார்த்தைகளா உண்மையா என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் அந்த வார்த்தைகளை கேட்க‌ பிடித்திருந்தது. அவனின் கழுத்தை கட்டிக் கொண்டாள். அவளின் தலையில் கூட ரோஜாக்களின் வாசம்தான் வீசியது. 


"குளிச்சிடுறியா.?" அவளை விலக்கி கேட்டான்.


"இல்ல இப்ப பரவால்ல.." என்றவளின் நாசியில் ரோஜா வாசத்துக்கு பதிலாக ரோஜாக்கள் எரியும் வாசம்தான் நிறைந்துக் கொண்டிருந்தது.


காந்திமதி விடாமல் கைபேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தாள். ஐம்பதாவது முறையாக இருக்கலாம்.


"என்ன.?" கட்டை குரலில் கேட்டார் காத்தவராயன்.


"எங்கே போன நீ.?" 


"நான் எங்கே போனா உனக்கென்னடி.?" திருப்பிக் கேட்டார்.


காந்திமதிக்கு கோபமாக வந்தது. அழைப்பை துண்டித்துக் கொண்டாள்.


காத்தவராயன் கையில் இருந்த பழை‌ய‌ வார பத்திரிக்கை ஒன்றை இறுக்கமாக பற்றியபடி அந்த கட்டிடத்திற்குள் நுழைந்தார். 


தேடி‌ வந்த அலுவலகத்தின் முன்னால் வந்து நின்றார். பூட்டியிருந்தது. பூட்டை உதைத்து விட்டு முன்னால் இருந்த கிரில் கம்பியில் சாய்ந்து நின்றார். கையில் இருந்த வார இதழை பிரித்தார். அது வார இதழ்தான். ஆனால் மஞ்சள் பத்திரிக்கை ரகமாக இருந்தது. பத்திரிக்கையின் அட்டை படமாக இருந்த கழுத்து இல்லாத பெண்ணின் உடம்பு பாதி மறைத்திருந்தது. ஆனால் நடு பக்கத்தில் முகத்தை தவிர மீதி அத்தனையும் அப்படியே இருந்தது.


ஊட்டி வீட்டில் இந்த புத்தகத்தை கையில் எடுத்த நேரத்திலேயே உறைந்து விட்டிருந்தார். அட்டை படத்தை பார்க்கும் பொழுதே அது காந்திமதி என்பதை அறிந்து கொண்டிருந்தார். அவளின் உடம்பை அவரை தவிர வேறு யாராலுமே இந்த அளவிற்கு அறிந்து வைத்திருந்திருக்க முடியாது என்பதுதான் உண்மை. காரணங்கள் பலவற்றை காட்டி திருமணத்தை அப்போது தள்ளி போட்டிருந்தாலும் கூட அவளின் கணவனாகதான் இருந்தார் காத்தவராயன். அவளை மனைவியாக மட்டும்தான் பார்த்தார். அதனால்தான் அவள் கைக்கு அகப்படாமல் ஓடியும் கூட அவளை மட்டுமே துரத்திக் கொண்டிருந்தார்.


தன் காதலியை, தன் மனைவியை இப்படி நிர்வாணமாக புகைப்படம் எடுத்து இந்த பத்திரிக்கையில் வெளியிட்டவன் யாரென்று அறியதான் இங்கே புறப்பட்டு வந்திருந்தார் அவர். 


***


யவனா‌ கைகள் நடுங்க உடையை அணிந்தாள். கதவை திறந்து வெளியே வந்தாள். எதிரே இருந்த சுவரில் சாய்ந்து நின்றிருந்தான் வருண்.


விழிகளில் வழியும் கண்ணீரோடு நடந்தவள் தனது போனை எடுத்தாள். எண்களை அழுத்தினாள்.


"என்ன பண்ற.?" என்றான் பின்னால் வந்தவன்.


"போலிஸ்க்கு போன் பண்றேன்.. உன்னை மாதிரி பொறுக்கியை சும்மா விடுவேன்னு நினைக்கிறியா.?" எனக் கேட்டவள் காவல் நிலையத்திற்கு அழைப்பு விடுத்தாள்.


அடுத்த அத்தியாயத்தில் சந்திக்கலாம் நட்புள்ளங்களே..



Post a Comment

0 Comments